பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு ஓவியம் வரையும் நிகழ்ச்சி


பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு ஓவியம் வரையும் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 11 March 2023 6:45 PM GMT (Updated: 11 March 2023 6:45 PM GMT)

அகில் மரங்களை பாதுகாப்பது குறித்து பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு ஓவியம் வரையும் நிகழ்ச்சியை கலெக்டர் பழனி தொடங்கி வைத்தார்

விழுப்புரம்

விழுப்புரம்

விழிப்புணர்வு ஓவியம்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அகில் மரங்களை பாதுகாப்பது குறித்து பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு ஓவியம் வரையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதை மாவட்ட கலெக்டர் சி.பழனி தொடங்கி வைத்து பேசியதாவது:-

தமிழ்நாட்டில் பசுமைப்போர்வை திட்டத்தின்கீழ் பசுமைக்காடுகளை உருவாக்கவும், புவி வெப்பமயமாதலை தடுக்கவும், பொதுமக்களுக்கு சுத்தமான இயற்கை காற்று கிடைக்கவும், சுகாதாரமான சூழலை ஏற்படுத்திக்கொடுத்திடும் பொருட்டு அரசுக்கு சொந்தமான இடங்கள், அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், வீடுகள், விவசாய நிலங்கள் போன்ற இடங்களில் அதிகளவில் மரக்கன்றுகள் நட்டு பாதுகாக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதோடு மரங்கள் வளர்ப்பது குறித்தும், மரங்களை பாதுகாப்பது குறித்தும் பொதுமக்களிடையே போதிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளது.

பசுமை போர்வை

அதனடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தில் பசுமை போர்வையை உருவாக்கும் வகையில் அரசுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் வனத்துறைக்கு சொந்தமான இடங்களில் பெருமளவில் மரக்கன்றுகள் நட்டு பசுமைக்காடுகள் திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது. மேலும் அரசு அலுவலகங்கள், பள்ளி- கல்லூரிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக அகில் மரங்களை பாதுகாப்பது குறித்து பள்ளி மாணவ- மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு ஓவியம் வரையும் நிகழ்ச்சி தொடங்கி வைக்கப்பட்டு பொதுமக்களிடையே மரங்களை வளர்ப்பது, பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள், விவசாயிகள், அரசு அலுவலர்கள் ஆகியோர் தங்கள் பகுதிகளில் மரங்களை நட்டு வளர்த்து பாதுகாத்திட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் உதவி வன பாதுகாவலர் உமாசங்கர், வனக்காப்பாளர் பாபு, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சத்தியமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story