வன்முறை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி


வன்முறை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
x

வன்முறை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

சிவகங்கை

காரைக்குடி,

அழகப்பா பல்கலைக்கழக மகளிரியல் துறை, மாவட்ட சமூக நலத்துறை மற்றும் மாநில கிராமப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவை இணைந்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் விழிப்புணர்வு நிகழ்வின் ஒரு பகுதியாக சுய உதவி குழு மகளிருக்கான ஒருநாள் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி மகளிரியல் துறை கருத்தரங்க கூடத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ரவி தலைமை தாங்கினார். அழகப்பா பல்கலைக்கழக மகளிர் துறை தலைவர் பேராசிரியை மணிமேகலை வரவேற்றாார்.

துணைவேந்தர் ரவி பேசியதாவது:- அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு சமமான வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். கல்வி அறிவு குறைந்த நாடுகளில் பெண்கள் மீதான வன்முறை அதிகம் உள்ளது. அதே நேரத்தில் வளர்ந்த நாடுகளில் பெண்கள் மீதான வன்முறை குறைவாக உள்ளது. பெண்கள் மீதான வன்முறைகள் குறைவதற்கு பெண்களுக்கு பாதுகாப்பு தொடர்பான சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு மிக அவசியம். இவ்வாறு அவர் பேசினார்.

காரைக்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு ஸ்டாலின், காவல் நிலையங்கள் பெண்கள் பாதுகாப்பாக இருக்க பல்வேறு வழிகளில் உதவி புரிகிறது. தங்களுக்கு ஏற்படும் பிரச்சினை களுக்கு பெண்கள் எவ்வித தயக்கமும் இன்றி காவல் நிலையத்திற்கு வந்து தீர்வு காணவேண்டும். பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பிற்காக செயல்படும் பிரிவுக்கான எண்களை தொடர்பு கொள்ளவேண்டும். பெண்கள் அனைவரும் தங்கள் கைபேசியில் காவலர் செயலினை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு பேசினார்.

மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி அன்பு குளோரியா சமூக நலத்துறையின் மூலமாக பெண்களுக்கு செய்யப்படும் உதவிகள் மற்றும் அவற்றினால் ஏற்படக்கூடிய நன்மைகள் பற்றி பேசினார். வக்கீல் கண்ணப்பன் பெண்கள் அனைவரும் தன்னம்பிக்கையுடனும் தைரியமாகவும் இருந்து தங்களுக்கு வரும் பிரச்சினைகளை எதிர் கொண்டு சட்டரீதியாக தீர்வு காண வழிமுறைகளை தெரிவித்தார். நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பல்வேறு துறைகளை சேர்ந்த பேராசிரியர்கள், மாணவிகள், பெண் அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story