ஆழித்தேரோட்டம்: திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப்ரல் 1-ம் தேதி உள்ளூர் விடுமுறை


ஆழித்தேரோட்டம்: திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப்ரல் 1-ம் தேதி உள்ளூர் விடுமுறை
x

ஆழித்தேரோட்டத்தையொட்டி திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப்ரல் 1ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவாரூர்,

தியாகராஜர் கோவில்

திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது. இத்தகைய சிறப்புமிக்க இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.

ஆழித்தேரோட்டம்

அதன்படி இந்த ஆண்டுக்கான ஆழித்தேரோட்டம் அடுத்த மாதம் (ஏப்ரல்) 1-ந் தேதி நடைபெற உள்ள நிலையில் பங்குனி உத்திர பெருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் உற்சவம், சாமி வீதி உலா நடைபெற்று வருகிறது.

16-ந் தேதி (வியாழக்கிழமை) முதல் 18-ந் தேதி வரை பக்தோற்சவம் எடியார் கூடும் திருவிழாவும், 19-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலப்பைரவர் திருவிழாவும், 20-ந் தேதி காட்சி கொடுத்த நாயனார் திருவிழாவும் நடக்கிறது. இதேபோல் தினமும் முக்கிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. சந்திரசேகரரர், அம்பாள், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் வீதியுலா நடக்கிறது.

உள்ளூர் விடுமுறை

இந்த நிலையில், திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான உலகப் பிரசித்தி பெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்டம் அடுத்த மாதம் (ஏப்ரல்) 1-ந் தேதி நடக்கிறது. ஆழித்தேரோட்டத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப்ரல் 1-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த தேர் ஆசியாவிலேயே மிகப்பெரியது. அலங்கரிக்கப்பட்ட இந்த தேரின் உயரம் 96 அடியாகும். இதன் மொத்த எடை 300 டன். திருச்சி பெல் நிறுவனம் மூலம் நான்கு இரும்பு சக்கரங்களிலும் 'ஹைட்ராலிக் பிரேக்' பொருத்தப்பட்டுள்ளது.


Next Story