பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபின மாணவ- மாணவிகள் விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்


பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபின மாணவ- மாணவிகள் விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
x

பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபின மாணவ- மாணவிகள் விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர்

தமிழ்நாடு அரசால் திருவள்ளுர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவிகளுக்கென 34 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் மாணவர்களுக்கான பள்ளி விடுதிகள் 23, மாணவி்களுக்கு 10, கல்லூரி விடுதிகள் மாணவர்களுக்கு ஒரு விடுதியும் உள்ளது.

பள்ளி விடுதிகளில் 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயில்கிற மாணவ-மாணவிகளும் கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் பயிலும் மாணவ- மாணவிகள் சேர தகுதியுடையவர்கள் ஆவார்கள்.

விடுதிகளில் பின்வரும் எந்தவித செலவினமும் இல்லாமல் சலுகைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. அனைத்து விடுதி மாணவ- மாணவிகளுக்கு உணவு தங்கும் வசதியும் அளிக்கப்படும். 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ- மாணவிகளுக்கு 4 இணைச்சீருடைகள் வழங்கப்படும். 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவ- மாணவிகளுக்கு சிறப்பு வழிகாட்டிகள் வழங்கப்படும். மலைப்பிரதேசத்தில் இயங்கும் விடுதிகளில் கம்பளி மேலாடைகள் வழங்கப்படும். விடுதிகளில் சேர பெற்றோர் அல்லது பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்தில் இருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கிலோ மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவிகளுக்கு பொருந்தாது. தகுதியுடைய மாணவ- மாணவிகள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளிகளிடமிருந்தோ அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாக பெற்று கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளை பொறுத்தவரை சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வருகிற ஜூன் 15-ந் தேதிக்குள்ளும் கல்லூரி விடுதிகளை பொறுத்தவரை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வருகிற 15-ந் தேதிக்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும். மாணவ- மாணவிகள் விண்ணப்பிக்கும் போது சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் எதுவும் அளிக்க தேவையில்லை. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியாக 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

எனவே, மாணவ- மாணவிகள் அரசின் இந்த சலுகைகளை பெற்று, பயனடையுமாறு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.


Next Story