பி.எப்.ஐ அமைப்பிற்கு தடை: சென்னையில் பொதுமக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு தீவிரம் - காவல் ஆணையர் உத்தரவு
சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற இஸ்லாமிய அமைப்பு நாட்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம், பயங்கரவாத செயல்களுக்கு நிதிஉதவி அளித்தல், பயங்கரவாத செயலுக்கு பயிற்சி, பயங்கரவாத செயலுக்கு ஆட்கள் சேர்த்தல் உள்பட பல்வேறு புகார்கள் எழுந்தன
இது, தொடர்பாக 15 மாநிலங்களில் 93 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு, அமலாக்கத்துறை கடந்த 22-ம் தேதி அதிரடி சோதனை நடத்தியது.
இந்த சோதனையில் 106 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சோதனைக்கு கண்டனம் தெரிவித்து நடந்த போராட்டத்தில் பல இடங்களில் கல்வீச்சு, வன்முறை சம்பவங்களும் அரங்கேறியது.
இந்நிலையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகனை சட்டவிரோத அமைப்புகளாக அறிவித்த மத்திய உள்துறை அமைச்சகம், இந்த அமைப்புகள் 5 ஆண்டுகள் இந்தியாவில் செயல்பட தடை விதித்து அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதனை தொடர்ந்து பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
மேலும, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் முழுவதும் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவும் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். இதேபோன்று, 12 மாவட்டங்களில் உள்ள துணை ஆணையர்களும் முழு உஷார் நிலையில் இருக்கவும் அறிவுறுத்தி உள்ளார்.