வேளாண் விஞ்ஞானி எம்.எஸ் சுவாமிநாதனுக்கு பாரதரத்னா விருது வழங்கப்பட்டது வரவேற்கத்தக்கது - ராமதாஸ்


வேளாண் விஞ்ஞானி எம்.எஸ் சுவாமிநாதனுக்கு பாரதரத்னா விருது வழங்கப்பட்டது வரவேற்கத்தக்கது - ராமதாஸ்
x

பொருளாதார சீர்திருத்தங்களை அறிமுகம் செய்து இந்தியாவை பொருளாதார வல்லரசாக மாற்ற வழிவகுத்தவர் நரசிம்மராவ் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

இந்தியாவின் முன்னாள் பிரதமர்கள் சரண்சிங், நரசிம்மராவ் ஆகியோருக்கும், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ் சுவாமிநாதனுக்கும் இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. மத்திய அரசின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது. மூவருமே பாரதரத்னா விருதுக்கு முழுமையான தகுதி பெற்றவர்கள்.

உழவர் குடியில் பிறந்து இந்தியாவின் பிரதமராக உயர்ந்த சரண்சிங் உழவர்களின் நலனுக்காக போராடி பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தவர். அவரது பிறந்தநாள் தான் தேசிய உழவர் நாளாக கொண்டாடப்படுகிறது. பொருளாதார வீழ்ச்சியின் விளிம்பில் இருந்த இந்தியாவின் பொருளாதார சீர்திருத்தங்களை அறிமுகம் செய்து இந்தியாவை பொருளாதார வல்லரசாக மாற்ற வழிவகுத்தவர் நரசிம்மராவ்.

இந்தியா உணவுப் பஞ்சத்தில் தவித்த போது பசுமைப் புரட்சியை முன் நின்று நடத்தி நாட்டின் உணவு உற்பத்தியை பெருக்கிய பெருமை எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு உண்டு. இந்தத் தலைவர்களின் உழைப்புக்கும், தொண்டுக்கும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாரதரத்னா விருது சிறந்த அங்கீகாரம் ஆகும்.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.


Next Story