மாரியம்மன் கோவிலில் பூமிதி திருவிழா தொடங்கியது


மாரியம்மன் கோவிலில் பூமிதி திருவிழா தொடங்கியது
x
தினத்தந்தி 13 March 2023 7:30 PM GMT (Updated: 13 March 2023 7:31 PM GMT)
நாமக்கல்

பரமத்திவேலூர்:-

நன்செய் இடையாறு மாரியம்மன் கோவிலில் பூமிதி திருவிழா தொடங்கியது. கம்பம் நடுதல் நிகழ்ச்சியில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

மாரியம்மன் கோவில்

பரமத்திவேலூர் அருகே நன்செய் இடையாறு மாரியம்மன் கோவில் திருவிழா கம்பம் நடும் விழாவுடன் விழா தொடங்கியது. விழாவை முன்னிட்டு பக்தர்கள் மாரியம்மன் கோவில் முன்பு உள்ள கம்பத்திற்கும், மாரியம்மனுக்கும் புனித நீர் ஊற்றி வழிபட்டனர்.

நேற்று முதல் 18-ந் தேதி வரை தினமும் இரவு கம்பம் சுற்றி ஆடும் நிகழ்ச்சி நடக்கிறது. 19-ந் தேதி இரவு மறுகாப்பு கட்டுதலும், அன்று இரவு முதல் 25-ந் தேதி வரை அம்மன் தினமும் வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

பூமிதி விழா

26-ந் தேதி இரவு வடிசோறு நிகழ்ச்சியும், 27-ந் தேதி காலை 65 அடி நீளமுள்ள பூ குண்டம் வெட்டப்பட்டு பூ போடப்படும். தொடர்ந்து மதியம் 2 மணி அளவில் ராஜா கோவிலில் இருந்து மணிவேல் புறப்பட்டு காவிரி ஆற்றுக்கு சென்றதும் பூமிதி விழா தொடங்கி இரவு 7 மணி வரை நடைபெறும்.

தமிழகத்திலேயே நீளமான பூக்குண்டத்தில் பக்தர்கள் இறங்கும் பூமிதி விழா இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பூமிதி திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆண் பக்தர்கள் மட்டும் தீ மிதித்தும், பெண்கள் பூ போடும் விழாவிலும் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவார்கள். அன்று இரவு வாணவேடிக்கை நிகழ்ச்சி நடக்கிறது.

கம்பம் ஆற்றில் விடுதல்

28-ந் தேதி காலை கிடா வெட்டும் நிகழ்ச்சியும், மாலை மாவிளக்கு மற்றும் அலகு குத்துதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.

29-ந் தேதி காலை கம்பம் ஆற்றில் விடுதலும், மஞ்சள் நீராடல் விழாவும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை நன்செய் இடையாறு மாரியம்மன் கோவில் எட்டுபட்டி ஊர் தர்மகர்த்தாக்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.


Next Story