மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி


மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி
x

தஞ்சையில் மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி வருகிற 14-ந் தேதி நடக்கிறது.

தஞ்சாவூர்

சைக்கிள் போட்டி

தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா பிறந்த தினத்தை சிறப்பாக கொண்டாடும் வகையில் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி வருகிற 14-ந் தேதி(சனிக்கிழமை) காலை 7 மணிக்கு தஞ்சையில் நடக்கிறது. தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் இருந்து தொடங்கி பாலாஜிநகர், ஈஸ்வரிநகர், மருத்துவக்கல்லூரி சாலை வழியாக பிள்ளையார்பட்டி புறவழிச்சாலை ரவுண்டானா வரை சென்று மீண்டும் அதே வழியாக அன்னை சத்யா விளையாட்டு அரங்கம் வரை நடக்கிறது.

13 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 15 கிலோமீட்டர் தூரமும், 15 முதல் 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கிலோமீட்டர் தூரமும், 13 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கு 10 கிலோமீட்டர் தூரமும், 15 முதல் 17 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கு 15 கிலோமீட்டர் தூரமும் நடத்தப்பட உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் இந்தியாவில் தயாரான சாதாரண சைக்கிள்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். போட்டி தொடங்குவதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்னரே போட்டி நடைபெறும் இடத்திற்கு வர வேண்டும்.

வயது சான்றிதழ்

பள்ளி தலைமை ஆசிரியரிடம் இருந்து பெற்ற வயது சான்றிதழுடன் வர வேண்டும். வயது சான்றிதழ் கொண்டு வராதவர்கள் போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்த போட்டியில் முதல் 3 இடங்களில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு பரிசுத்தொகையாக தலா ரூ.5 ஆயிரமும், ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம் வீதமும், 4 முதல் 10-வது இடம் வரை வெற்றி பெறுபவர்களுக்கு தலா ரூ.250 வீதமும் பரிசுத்தொகையும், சான்றிதழ்களும் வழங்கப்படும். போட்டியில் பங்கு பெறுபவர்கள் தங்கள் பதிவை மாவட்ட விளையாட்டு அரங்க அலுவலக நேரத்தில் வருகிற 13-ந் தேதி மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது அலுவலக தொலைபேசி எண்: 04362-235633 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு பதிவு செய்ய வேண்டும்.

மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story