பயணிகளை அழைக்க செல்லும்போது தாக்குவதாக ஆட்டோ டிரைவர்கள் மீது பைக் டாக்சி டிரைவர்கள் புகார்


பயணிகளை அழைக்க செல்லும்போது தாக்குவதாக ஆட்டோ டிரைவர்கள் மீது பைக் டாக்சி டிரைவர்கள் புகார்
x

பயணிகளை அழைக்க செல்லும்போது ஆட்டோ டிரைவர்கள் தாக்குவதாக பைக் டாக்சி டிரைவர்கள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

சென்னை

சென்னையில் ஓலா ஆட்டோ, கால்டாக்சி வரிசையில் பைக் டாக்சியும் (மோட்டார் சைக்கிள் சவாரி) பிரபலமாகி வருகிறது. இதனால் ஆட்டோ டிரைவர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. எனவே அவர்கள் பைக் டாக்சிக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் ஆட்டோ டிரைவர்கள் தங்களை தாக்குவதாக பைக் டாக்சி டிரைவர்கள் புகார் அளித்துள்ளனர். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பைக் டாக்சி டிரைவர்கள் திரண்டு வந்து மனு அளித்தனர்.

அதில், 'நாங்கள் பயணியை அழைக்க செல்லும்போது கோயம்பேடு, சென்டிரல், ஆலந்தூர், விமான நிலையம், எழும்பூர், மாதவரம் ஆகிய இடங்களில் ஆட்டோ டிரைவர்கள் எங்களுடைய செல்போனை பறிப்பது, ஆபாசமாக திட்டுவது, கல் எடுத்து அடிப்பது, மோட்டார் சைக்கிளை உடைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். இதனால் எங்களுக்கும், வாகனத்துக்கும் பாதுகாப்பு இல்லை.

மேலும் மோட்டார் சைக்கிளில் வரும் பயணியையும் தகாத வார்த்தைகளால் திட்டுகிறார்கள். பெண் வாடிக்கையாளர்களை ஆபாசமாக பேசுகிறார்கள். இதுகுறித்து கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே நீங்கள் (போலீஸ் கமிஷனர்) எங்கள் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story