அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் பாஜகவிற்கு எள்ளளவும் சம்பந்தம் இல்லை - பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி


அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் பாஜகவிற்கு எள்ளளவும் சம்பந்தம் இல்லை - பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி
x

அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் பாஜகவிற்கு எள்ளளவும் சம்பந்தம் இல்லை என்று பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை,

அ.தி.மு.க. செயற்குழு - பொதுக்குழு கூட்டம், வருகிற 23-ந்தேதி சென்னையை அடுத்த வானகரத்தில் நடக்கிறது. இதையொட்டி நடந்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் ஒற்றை தலைமை கோஷம் ஒலித்தது.

தற்போது அ.தி.மு.க. ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் தனித்தனியாக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இது அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் அதிமுகவின் ஒற்றை தலைமை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி கூறுகையில்,

அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் பாஜகவிற்கு எள்ளளவும் சம்பந்தம் இல்லை. இது குறித்து கருத்து கூறவும் விருப்பமில்லை. இதை பற்றி அவர்களே பேசி முடிவு எடுத்துக் கொள்ள வேண்டும். இது அவர்களுக்கும் நல்லது, எங்களுக்கும் நல்லது. ஒற்றை தலைமை குறித்து அவர்களே நல்ல முடிவை எடுப்பார்கள்.

நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி மக்களை தூண்டி விட்டு போராட்டம் நடத்தி வருகிறது. இது பொதுமக்கள் பிரச்னை இல்லை, ஊழல் குற்றச்சாட்டு என்பதால் இதை நீதிமன்றத்தில் சந்திக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story