காலை சிற்றுண்டி திட்டம்: செப்., 15ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


காலை சிற்றுண்டி திட்டம்: செப்., 15ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x

மதுரையில் செப்டம்பர் 15ம் தேதியன்று காலை சிற்றுண்டி திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

சென்னை,

தமிழகத்தில் அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலை உணவு வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, முதற்கட்டமாக தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் கிராமப்புறங்களில் உள்ள 1,545 பள்ளிகளில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இதற்காக தமிழக அரசு ரூ.33.56 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது. இதன்மூலமாக 1.14 லட்சம் மாணவ, மாணவியர்கள் பயன்பெறுவர். இந்தத் திட்டம் படிப்படியாக தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படுகிறது. காலையில் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு சூடான, சத்தான உணவை சமைத்து, அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டுள்ளன.

இந்நிலையில், அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15ம் தேதியன்று பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் தொடங்கி வைக்கிறார்.

மதுரை மாநகராட்சியில் உள்ள 26 தொடக்கப் பள்ளிகளில் 4,388 மாணவர்கள் பயனடையும் வகையில் திட்டம் தொடங்கப்படுகிறது. சென்னை உள்பட 14 மாநகராட்சிகளில் 318 பள்ளிகளில் 37,740 மாணவ, மாணவியருக்கு சிற்றுண்டி வழங்கப்பட உள்ளது. அதுபோல தமிழகத்தில் 23 நகராட்சிகளில் உள்ள 163 பள்ளிகளில் 17,427 மாணவ, மாணவியருக்கு சிற்றுண்டி வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story