திருவள்ளூரில் வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகை திருட்டு


திருவள்ளூரில் வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகை திருட்டு
x

திருவள்ளூரில் வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் தங்க நகை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவள்ளூர்

வாகனம் விற்பனை செய்பவர்

திருவள்ளூர் வி.எம்.நகர் சமாரியாஸ் நகரில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் கார்த்திகேயன் (வயது 45). இவர் திருவள்ளூரில் கார் சர்வீஸ் சென்டர் மற்றும் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் கார்த்திகேயனின் தாயார் இறந்து விட்டதால் அவருக்கு காரியம் செய்ய கடந்த 2-ந் தேதி மாலை கார்த்திகேயன் தனது குடும்பத்தாருடன் வீட்டை பூட்டிவிட்டு மணவாளநகரில் உள்ள சொந்த வீட்டிற்கு சென்று குடும்பத்துடன் அன்று இரவு தங்கினார்.

30 பவுன் திருட்டு

பின்னர் நேற்று முன்தினம் காலை வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கிரில் கேட் மற்றும் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த அனைத்து பொருட்களும் சிதறியபடி கிடந்தது. மேலும் பீரோவில் வைத்திருந்த செயின், வளையல், மூக்குத்தி என 30 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து கார்த்திகேயன் திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


Next Story