வேலூர் மாவட்டத்தில் பி.எஸ்.என்.எல். 4ஜி சேவை விரைவில் அறிமுகம்


வேலூர் மாவட்டத்தில் பி.எஸ்.என்.எல். 4ஜி சேவை விரைவில் அறிமுகம்
x

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் பி.எஸ்.என்.எல். 4ஜி சேவை விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்று முதன்மை பொது மேலாளர் எ.வி.ஸ்ரீகுமார் தெரிவித்துள்ளார்.

வேலூர்

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் பி.எஸ்.என்.எல். 4ஜி சேவை விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்று முதன்மை பொது மேலாளர் எ.வி.ஸ்ரீகுமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பி.எஸ்.என்.எல். 4ஜி சேவை

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் விரைவில் திறன் மேம்படுத்தப்பட்ட முழு அளவிலான 4ஜி சேவையை தொடங்க பி.எஸ்.என்.எல். தயாராகி வருகிறது.

மத்திய அரசின் 'ஆத்மநிர்பார் பாரத்' முயற்சியின் கீழ் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட சிறந்த 4ஜி தொழில்நுட்பம் மூலம் 4-வது தலைமுறை மொபைல் நெட்வொர்க் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் பி.எஸ்.என்.எல். இணையசேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு அதிகளவு பயன் கிடைக்கும். தற்போதைய இணையதளத்தின் வேகம் மற்றும் தரம் வரும் நாட்களில் 4 முதல் 5 மடங்கு அதிகரிக்க உள்ளது.

4ஜி தொழில்நுட்பத்தை செயல்படுத்துவதற்காக வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள 450 செல்போன் டவர்களும் மேம்படுத்தப்பட்ட 4ஜி தொழில்நுட்பத்துக்கு மாற்றப்படுகிறது.

இந்த தொழில்நுட்ப மேம்படுத்துதலின் மூலம் அனைத்து செல்போன் டவர்களும் 5ஜி திறன் கொண்டதாக இருக்கும். மேலும் மென்பொருள் மேம்படுத்தல் மூலம் 5ஜிக்கு எளிதாக மாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வேலூர் உள்பட 4 மாவட்டங்களில் 28 புதிய 4ஜி செல்போன் டவர்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளன.

சிம்கார்டுகள் மாற்றம்...

இதன் மூலம் 4 மாவட்டங்களிலும் பி.எஸ்.என்.எல். மொபைல் கவரேஜ் மேம்படும். மேலும் வாடிக்கையாளர்களுக்கு தரமான சேவை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பி.எஸ்.என்.எல். மேம்பட்ட 4ஜி சேவைகளை பெறுவதற்கு தற்போது பி.எஸ்.என்.எல். 2ஜி, 3ஜி சிம்கார்டுகள் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் அருகே உள்ள பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர் சேவை மையங்கள், கிளை அலுவலகங்கள் மற்றும் மேளா நடைபெறும் இடங்களில் கட்டணமின்றி 4ஜி சிம்கார்டாக மாற்றி கொள்ளலாம்.

வாடிக்கையாளர்கள் தங்கள் சிம்கார்டுகளை மாற்றி கொள்வதற்கு வசதியாக வேலூர் வணிக பகுதியில் உள்ள பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர் சேவை மையங்கள் இந்த மாதம் (ஜூன்) ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படும். இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.


Next Story