கல்பாக்கம், சதுரங்கப்பட்டினத்தில் 7 கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு


கல்பாக்கம், சதுரங்கப்பட்டினத்தில் 7 கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு
x

கல்பாக்கத்தில் அடுத்தடுத்து 7 கடைகளின் பூட்டை உடைத்து திருடப்பட்டது.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் பகுதியில் உள்ள துணிக்கடையின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் 2 பேர் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான துணிகளை திருடி சென்றுள்ளனர். அங்கு இருந்த கண்காணிப்பு கேமராவில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 இளைஞர்கள் உள்ளே நுழைந்து கல்லாவில் பணம் உள்ளதா? என தேடிய போது பணம் இல்லாததால் துணிக்கடையின் அலமாரிகளில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த ரூ.50 ஆயிரம் மதிப்பிலான துணிகளை திருடி செல்வது பதிவாகி இருந்தது.

அந்த கடைக்கு அருகாமையில் உள்ள மருந்து கடை, சிறிய மளிகை கடை போன்றவற்றின் பூட்டுகளும் உடைக்கப்பட்டிருந்தது. மளிகை கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த திருடர்கள் அங்குள்ள கல்லா பெட்டியை உடைத்து ரூ.6 ஆயிரம் ரொக்கப்பணத்தை திருடி சென்றுள்ளனர்.

கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம் பஜார் தெருவில் உள்ள ஒரு மளிகை கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து ரூ.10 ஆயிரம் திருடப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

சம்பவம் நடந்த நள்ளிரவு நேரத்தில் கல்பாக்கம், சதுரங்கப்பட்டினம் பகுதியில் நீண்ட நேரம் மின்வெட்டு ஏற்பட்டது. இந்த மின்வெட்டை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட நபர்கள் ஹெல்மெட் மற்றும் முகமூடி அணிந்த வந்து இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு அடுத்தடுத்து 7 கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டு திருடப்பட்டிருந்தது.

இது குறித்து மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஸ்வரன் உத்தரவின் பேரில் கல்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story