பெண்ணாடம் அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல்; 2 வாலிபர்கள் பலி


பெண்ணாடம் அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல்; 2 வாலிபர்கள் பலி
x
தினத்தந்தி 2 March 2023 6:45 PM GMT (Updated: 2 March 2023 6:46 PM GMT)

பெண்ணாடம் அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் உயிாிழந்தனா்.

கடலூர்

பெண்ணாடம்,

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே பெண்ணாடம் இருளர் தெருவை சேர்ந்தவர் அய்யப்பன்(வயது 25). இவருடைய மனைவி தாட்சாயிணி. இவர்களுக்கு கடந்த மாதம் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில் தனது மகனுக்கு பிறப்பு சான்றிதழ் வாங்குவதற்காக நேற்று, அய்யப்பன் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர் மருதுபாண்டியுடன் மோட்டார் சைக்கிளில் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சென்றார். பின்னர் பிறப்பு சான்றிதழை வாங்கிக்கொண்டு, இருவரும் வீட்டுக்கு புறப்பட்டனர். பெண்ணாடம் அடுத்த துறையூர் பஸ் நிறுத்தம் அருகே வந்துகொண்டிருந்தபோது, திருச்சியில் இருந்து கடலூர் நோக்கி வந்த அரசு பஸ் ஒன்று, அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் அய்யப்பன் மற்றும் மருதுபாண்டி ஆகியோர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

போலீசார் விசாரணை

இதுபற்றி தகவல் அறிந்த பெண்ணாடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகஸ்பதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்து குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் பலியான 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்த குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் வாங்க சென்ற 2 பேர் விபத்தில் சிக்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story