இதை விட முட்டாள்தனம் இருக்க முடியுமா? - ராமதாஸ்


இதை விட முட்டாள்தனம் இருக்க முடியுமா? - ராமதாஸ்
x

இதை விட முட்டாள்தனம் இருக்க முடியுமா என்று கூறி பாமக நிறுவனர் ராமதாஸ் இரண்டு வழக்குகளை பகிர்ந்துள்ளார்.

சென்னை,

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

குஜராத் உயர்நீதிமன்றத்தில் ஓர் வழக்கு.

பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட 17 வயது பெண்ணின் கருவை கலைக்க அனுமதி கோரி அவரது பெற்றோர் முறையிடுகின்றனர். அந்த வழக்கை விசாரித்த குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி சமீர் தவே, "அந்தக் காலத்தில் பெண்கள் 14&15 வயதில் திருமணம் செய்து கொள்வதும், 17 வயது ஆவதற்குள் குழந்தை பெற்றுக் கொள்வதும் இயல்பானது தான். வேண்டுமானால் மனுஸ்மிர்தி நூலை படித்துப் பார்த்து இதை உறுதி செய்து கொள்ளுங்கள்" என்று கூறியிருக்கிறார்.

அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் இன்னொரு வழக்கு...

திருமணம் செய்வதாகக் கூறி தம்முடன் பழகி, ஏமாற்றிய காதலனுடன் திருமணம் செய்து வைக்க ஆணையிடக் கோரி பாதிக்கப்பட்ட பெண் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதியிடம் குற்றஞ்சாட்டப்பட்ட இளைஞர், "அந்த பெண்ணுக்கு 'மாங்கல்ய பாக்கியம் இல்லை' என்பதால் அவரை திருமணம் செய்ய முடியாது" என்று கூறுகிறார்.

அதைக்கேட்ட நீதிபதி பிரிஜ்ராஜ் சிங், அப்படியா? என்று பதறியதுடன், அவரது ஜாதகத்தை ஆராய்ந்து அந்தப் பெண்ணுக்கு மாங்கல்யா பாக்கியம் இருக்கிறதா என்பது குறித்து அறிக்கை அளிக்கும்படி லக்னோ பல்கலைக் கழகத்தின் ஜோதிடத்துறைக்கு ஆணையிட்டுள்ளார்.

இப்போது சொல்லுங்கள்....

இதை விட முட்டாள்தனம் இருக்க முடியுமா?

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


Next Story