தமிழ்நாட்டில் வாக்கு எண்ணிக்கையை முன்கூட்டியே நடத்தக் கோரிய வழக்கு - ஐகோர்ட்டு தள்ளுபடி


தமிழ்நாட்டில் வாக்கு எண்ணிக்கையை முன்கூட்டியே நடத்தக் கோரிய வழக்கு - ஐகோர்ட்டு தள்ளுபடி
x

கோப்புப்படம் 

இந்த வழக்கு விளம்பர நோக்குடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனக்கூறி, நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் ஏப்ரல் 19-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்த நிலையில், 45 நாட்கள் தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் மக்கள் இருக்க வேண்டியுள்ளது. தேர்தல் அறிவிப்பு, சட்ட விதிகளையும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தையும் மீறும் வகையில் உள்ளது. எனவே, தமிழகத்தில் முன்கூட்டியே வாக்கு எண்ணிக்கையை நடத்த வேண்டுமென்ற கோரிக்கையுடன் எழிலன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேர்தல் தேதி, வாக்கு எண்ணிக்கை தேதி அறிவிப்பு என்பது முழுக்க முழுக்க தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்துக்கு உட்பட்டது. இந்த வழக்கு விளம்பர நோக்குடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனக்கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மேலும், தேர்தல் நடவடிக்கைகளை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டும் என மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் எந்த காலக்கெடுவும் விதிக்கப்படவில்லை. எனவே, இதில் கோர்ட்டு தலையிட முடியாது என்றும் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.


Next Story