சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ் உள்ளிட்டவற்றை அரசு முத்திரையுடன் போலி சான்றிதழ் தயாரித்து மோசடி - முதியவர் உள்பட 2 பேர் கைது


சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ் உள்ளிட்டவற்றை அரசு முத்திரையுடன் போலி சான்றிதழ் தயாரித்து மோசடி - முதியவர் உள்பட 2 பேர் கைது
x

அம்பத்தூரில் போலி அரசு முத்திரையுடன் சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை தயாரித்து மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை

அம்பத்தூரில் சிலர் அரசு துறை ஆவணங்களை அரசு முத்திரையுடன் போலியாக தயார் செய்வதும், நிலம் தொடர்பான ஆவணங்களை போலியாக தயாரித்து மோசடியாக பத்திரப்பதிவு செய்து பணம் சம்பாதிப்பதாகவும் அம்பத்தூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து அம்பத்தூர் போலீசாருக்கு புகார் வந்தது. அதைத் தொடர்ந்து அம்பத்தூர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அம்பத்தூர் ஒரகடம், வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்த வின்சென்ட் (வயது 85) மற்றும் அம்பத்தூர் சோழம்பேடு சாலை, சத்தியபுரத்தை சேர்ந்த பினு (41) ஆகியோர் மோசடி சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இவர்கள் மாற்றுச்சான்றிதழ், பிறப்பு இறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், பட்டா உள்ளிட்ட பல்வேறு அரசு ஆவணங்களை போலியாக தயாரித்து பலருக்கு விற்று மோசடி செய்து அதன் மூலம் பணம் சம்பாதித்து வந்தது தெரியவந்தது. அதற்கு தேவையான தாசில்தார், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்டோரின் முக்கிய முத்திரைகளை தயாரித்து வைத்து அதை போலியாக பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து போலீசார் 2 பேர் மீதும் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.


Next Story