சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்-ப.சிதம்பரம் எம்.பி.-வலியுறுத்தல்


சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்-ப.சிதம்பரம் எம்.பி.-வலியுறுத்தல்
x

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என ப.சிதம்பரம் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா காலத்தில் 2 ஆண்டு காலம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நிதி ஒதுக்கப்படாமல் இருந்தது. இதனால் மக்களுக்கு வேண்டிய நலத்திட்டங்கள் நிறைவேற்ற முடியாமல் போனது. இதுகுறித்து பா.ஜனதா எம்.பி.க்களிடம் நிதி ஒதுக்கீடு குறித்து கேளுங்கள் என்று கேட்டதற்கு அவர்கள் நாடாளுமன்றத்தில் பேசுவதற்கே அச்சப்பட்டனர். 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். ஆனால் 2021-ல் எடுக்க வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பே இன்னும் எடுக்கப்படவில்லை. புலி, யானை கணக்கெடுப்புகள் கூட நடக்கிறது. அடுத்த கணக்கெடுப்பு சாதிவாரி கணக்கையும் சேர்த்து எடுக்க வேண்டும். எடுத்தால் தான் கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு பெற முடியும். 'நீட்' தேர்வு இல்லாமல் தான் புகழ்பெற்ற டாக்டர்கள் தமிழ்நாட்டிற்கு கிடைத்தார்கள். 'நீட்' தேர்வில் தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பது அனைத்து கட்சிகளும் ஏற்றுக்கொண்ட கருத்து. 'நீட்' தேர்வு தேவையில்லை என்பது தான் என்னுடைய கருத்தும். ஜனநாயக முறைப்படி 'நீட்' தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்காக தி.மு.க. கையெழுத்து இயக்கம் நடத்துகிறது. இதனை வரவேற்போம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story