ஆடிப்பெருக்கு விழா கொண்டாட்டம்


ஆடிப்பெருக்கு விழா கொண்டாட்டம்
x

பெரம்பலூரில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டது.

பெரம்பலூர்

ஆடிப்பெருக்கு பண்டிகை ஆற்றங்கரைகளை ஒட்டி வாழும் மக்களே வெகுவிமரிசையாக கொண்டாடுவார்கள். அதிலும் காவிரி ஆற்றங்கரை மக்கள் குறிப்பிடத்தக்கவர்கள். ஆனால் பெரம்பலூர் மாவட்டத்தில் காவிரி ஆறு கிடையாது என்பதால், சிலர் தங்களது வீடுகளில் உள்ள காவிரி தண்ணீர் தொட்டிக்கு பூஜை செய்து வழிபட்டனர். ஆடிப்பெருக்கு விழாவினை கொண்டாட பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து நிறைய மக்கள் திருச்சி காவிரி ஆற்றங்கரைக்கு சென்றனர். இதனால் மாவட்டத்தில் கோவில்களில் பக்தர்களின் கூட்டம் குறைவாக காணப்பட்டது.

குன்னம் தாலுகா ஆடுதுறை குற்றம் பொறுத்தவர் கோவிலின் நீவா நதி என புகழ்பெற்ற வெள்ளாற்று கரையில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு திருமணம் ஆகாத கன்னிப்பெண்கள் தங்களுக்கு விரைவில் திருமணம் ஆக வேண்டி சிறப்பு வழிபாடும், திருமணமான பெண்கள் தங்களுடைய தாலி கயிற்றை புதியதாக மாற்றி சடங்குகளை செய்தனர். அவர்கள் தாங்கள் திருமணத்தின் போது அணிந்திருந்த மாலைகளை ஆற்றில் விட்டனர். பின்னர் அருகில் உள்ள குற்றம் பொறுத்தவர் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று வழிபாடு நடத்தினர். மாலையில் வெள்ளாற்று கரைக்கு மக்கள் வந்து அமர்ந்து பொழுதை கழித்து விட்டு சென்றனர்.

பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூரில் பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோவிலுக்கு ஆடிப்பெருக்கை முன்னிட்டு நடந்த சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள், புதுமண தம்பதிகள் வந்து வழிபட்டு சென்றனர். இதே போல் ஆலத்தூர் தாலுகா, பாடாலூர் பகுதியில் உள்ள ஊட்டத்தூர் பிரிவு ரோடு செல்லும் சாலையில் உள்ள மாரியம்மன் கோவில், பஞ்சாயத்து ஆபீஸ் செல்லும் சாலையில் உள்ள ஸ்ரீ செல்வ முத்து மாரியம்மன் கோவிலுக்கும், பாடாலூரில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கும் ஆடிப்பெருக்கு விழாவினை முன்னிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் சுவாமி ஊர்வலம் நடந்தது. முன்னதாக அந்த கோவில்களுக்கு பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து குடங்களில் தீர்த்தம் எடுத்து வந்தனர். அந்த காவிரி தீர்த்தத்தால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.


Next Story