வேனில் ஏற முயன்ற பெண்ணிடம் செல்போன், பணம் அபேஸ்
![வேனில் ஏற முயன்ற பெண்ணிடம் செல்போன், பணம் அபேஸ் வேனில் ஏற முயன்ற பெண்ணிடம் செல்போன், பணம் அபேஸ்](https://media.dailythanthi.com/h-upload/2023/10/22/1582189-rupees.webp)
குலசேகரம் அருகே வேனில் ஏற முயன்ற பெண்ணிடம் செல்போன், பணத்தை அபேஸ் செய்தவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
பேச்சிப்பாறை அருகே மணியன்குழி பகுதியைச் சேர்ந்தவர் சேக் முகமது. இவருடைய மனைவி ஹசீனா (வயது 30). இவர் நேற்று முன்தினம் குலசேகரம் சந்தை சந்திப்புக்கு பொருட்கள் வாங்க தனது 2 மகள்களுடன் வந்தார்.
அங்கு பொருட்கள் வாங்கி விட்டு ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கப்பணம், ஏ.டி.எம். அட்டை உள்ளிட்டவைகள் அடங்கிய தனது மணி பர்ஸை பையில் போட்டு வைத்திருந்தார்.
பின்னர் தனது மகள்களுடன் அவர் சந்தை சந்திப்பில் இருந்து வீட்டுக்குச் செல்வதற்காக ஒரு தனியார் வேனில் ஏறியுள்ளார். அப்போது அவருடன் சேர்ந்து ஏராளமான பெண் பயணிகளும் ஏறினர். அதில் சிலர் ஏறி விட்டு திடீரென இறங்கி விட்டனர்.
இந்தநிலையில் ஹசீனா வீட்டுக்கு சென்று பார்த்த போது பையில் வைத்திருந்த மணி பர்ஸை காணவில்லை. வேனில் ஏறிய போது மர்ம பெண்கள் நைசாக மணி பர்ஸை அடித்துச் சென்றிருக்கலாம் என சந்தேகம் அடைந்தார்.
இதுகுறித்து ஹசீனா குலசேகரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் குலசேகரம் சந்திப்பு பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.