செங்குன்றம் அருகே மத்திய அரசு ஊழியருக்கு சரமாரி அரிவாள் வெட்டு - வாலிபர் கைது


செங்குன்றம் அருகே மத்திய அரசு ஊழியருக்கு சரமாரி அரிவாள் வெட்டு - வாலிபர் கைது
x

செங்குன்றம் அருகே மத்திய அரசு ஊழியரை சரமாரியாக அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

சென்னை

செங்குன்றம் அடுத்த வடகரை பள்ளிக்கூட தெருவைச் சேர்ந்தவர் விமல்ராஜ் (வயது 23). இவர், சென்னை அயனாவரத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனம் ஒன்றில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியராக வேலை செய்து வருகிறார். செங்குன்றத்தை அடுத்த விளாங்காடுப்பாக்கம் மேட்டு தெருவைச் சேர்ந்தவர் ஆகாஷ் (20).

இவரும், விமல்ராஜும் நேற்று முன்தினம் இரவு அம்பத்தூரில் இருந்து செங்குன்றம் நோக்கி வந்த மாநகர பஸ்சில் (தடம் எண்-62) வந்தனர். அப்போது பஸ்சில் திடீரென இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. சக பயணிகள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

இந்தநிலையில் நேற்று மாலை விமல்ராஜ், வடகரை போலீஸ் உதவி மையம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஆகாஷ், தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் விமல்ராஜை சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த விமல்ராஜ், ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.

உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆகாசை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story