"வட இந்தியர்களை ஆங்கிலம் தெரியாதவர்களாக வைத்திருப்பதே மத்திய அரசின் எண்ணம்" - வடசென்னை எம்.பி. கலாநிதி வீராசாமி


வட இந்தியர்களை ஆங்கிலம் தெரியாதவர்களாக வைத்திருப்பதே மத்திய அரசின் எண்ணம் - வடசென்னை எம்.பி. கலாநிதி வீராசாமி
x

அரசியலமைப்பு சட்டத்தின்படி மாநிலங்கள் விரும்பும் வரை ஆங்கில மொழியே இணைப்பு மொழி என்று கலாநிதி வீராசாமி எம்.பி. கூறியுள்ளார்.

சென்னை,

ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்ற குழு அளித்துள்ள அறிக்கையில், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களிலும், மத்திய பல்கலைக்கழகங்களிலும் கட்டாயமாக இந்தி மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும், ஆங்கிலம் உள்ள இடங்களில் இந்தியை இடம்பெற செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன்.

இதற்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக முதல்-அமைச்சர் வெளியிட்ட அறிக்கையில், "இன்னொரு மொழிப்போரை எங்கள் மீது திணித்திட வேண்டாம்" என மத்திய அரசை கடுமையாக சாடியிருந்தார்.

இந்த நிலையில் இது குறித்து வடசென்னை தொகுதி எம்.பி. கலாநிதி வீராசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது;-

"அரசியலமைப்பு சட்டத்தின்படி அந்தந்த மாநிலங்கள் விரும்பும் வரை ஆங்கில மொழியையே இணைப்பு மொழியாக வைத்திருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மத்திய அரசின் எண்ணம் என்னவென்றால், வட இந்தியர்கள் ஆங்கிலம் கற்றுக் கொண்டு உலக விவகாரங்களை தெரிந்து கொண்டால் அவர்களின் சாயம் வெளுத்துவிடும் என்பதற்காக, அவர்களை ஆங்கிலம் தெரியாதவர்களாகவே வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதன் காரணமாகத் தான் அவர்களுக்கு இந்தி மட்டும் தெரிந்தால் போது என்று வைத்திருக்கிறார்கள்."

இவ்வாறு கலாநிதி வீராசாமி எம்.பி. தெரிவித்தார்.


Next Story