திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் தேரோட்டம் - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் தேரோட்டம் - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x

திருவள்ளூரில் உள்ள வீரராகவ பெருமாள் கோவிலில் தேரோட்டம் நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவள்ளூர்

திருவள்ளூரில் உள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் கோவிலில் தை மாத பிரமோற்சவ விழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நாள்தோறும் காலையும், மாலையும் உற்சவர் வெவ்வேறு வாகனத்தில் முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தை பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக 7-ஆம் நாளான நேற்று வீரராகவப் பெருமாள் கோவிலில் உள்ள 60 அடி உயரம், 21 அடி அகலம் கொண்ட தேரோட்டம் நடைபெற்றது. தேரில் காலை 7 மணிக்கு உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் ஸ்ரீ வீரராகவப் பெருமாள் தேரடியில் இருந்து புறப்பட்டு 4 மாட வீதிகள் வழியாக சென்று தேர் மீண்டும் தேரடியை வந்தடைந்தது. ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் நோயை தீர்க்க வல்லவர் என்பதால் பக்தர்கள் உப்பு, மிளகு ஆகியவற்றை தேர் சக்கரத்தில் கொட்டி தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர்.

தேர் திருவிழாவையொட்டி ஏ.எஸ்.பி. விவேகானந்தா சுக்லா தலைமையில் டவுன் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த தேர் திருவிழாவில் சப்-கலெக்டர் ஏ.பி மகாபாரதி, வட்டாட்சியர் மதியழகன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வீரராகவரை வழிபட்டனர்.


Next Story