அய்யனார் கோவிலில் தேர் திருவிழா


அய்யனார் கோவிலில் தேர் திருவிழா
x

பெரியநாகலூர் கிராமத்தில் அய்யனார் கோவில் தேர் திருவிழா நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே பெரியநாகலூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலின் தேர் திருவிழாவையொட்டி கடந்த மாதம் 17-ந் தேதி பூ போடுதல் விழாவும், 24-ந் தேதி காப்பு கட்டுதல் விழாவும் நடைபெற்றது. இதையொட்டி நாள்தோறும் மண்டகப்படிதாரர்கள் சார்பில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. விழாவின் சிகர விழாவான தேர் திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. இதைத்தொடர்ந்து அய்யனார் கோவிலில் உள்ள விநாயகர், பூர்ண புஷ்கலாம்பிகா, அய்யனார், கருப்புசாமி, அரியமுத்து ஆண்டவர், செங்கமல ஆண்டவர் ஆகிய சுவாமிகளுக்கு பன்னீர், சந்தனம், பால், தயிர், இளநீர், திரவியபொடி, விபூதி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகைகளான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமிகளுக்கு வஸ்திரம் சாத்தப்பட்டு வேதமந்திரங்கள் முழங்க தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் காலை 10 மணிக்கு மேல் மேளதாளங்கள் முழங்க சுவாமிகள் தேரில் அருள்பாலித்தனர். தொடர்ந்து கொட்டும் மழையில் தேரை பொதுமக்கள் வடம் பிடித்து இழுத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று (வியாழக்கிழமை) மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது.


Next Story