2 ஆம் கட்ட சென்னை மெட்ரோ ரெயில் திட்டம்; பணியைத் தொடங்கிய 'கழுகு' இயந்திரம்


2 ஆம் கட்ட சென்னை மெட்ரோ ரெயில் திட்டம்; பணியைத் தொடங்கிய கழுகு இயந்திரம்
x
தினத்தந்தி 18 Jan 2024 11:00 PM GMT (Updated: 18 Jan 2024 11:00 PM GMT)

2-வது சுரங்கம் தோண்டும் இயந்திரம் 'கழுகு' கலங்கரை விளக்கத்தில் இருந்து போட் கிளப் நிலையம் வரை சுரங்கும் அமைக்கும் பணியை தொடங்கியது.

சென்னை,

சென்னையில் மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2-ம் கட்ட பணிகள் நடந்து வருகிறது. இதில் 4-வது வழித்தடமான கலங்கரை விளக்கத்தில் இருந்து பூந்தமல்லி வரையிலான பாதையை வருகிற 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்க திட்டமிட்டு பணிகள் நடந்து வருகிறது. மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கம் மெட்ரோ ரெயில் நிலையத்திலிருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதை கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இதில், 'பிளமிங்கோ' என பெயரிடப்பட்ட முதல் சுரங்கம் தோண்டும் எந்திரம் கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ந்தேதி முதல் சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கியது.

கலங்கரை விளக்கத்தில் இருந்து போட் கிளப் நிலையம் வரை சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. 'கழுகு' என பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் எந்திரம், கலங்கரை விளக்கம் நிலையத்திலிருந்து மயிலாப்பூர் (திருமயிலை) நோக்கி வெற்றிகரமாக மற்றொரு சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கியது. இந்த சுரங்கம் தோண்டும் எந்திரம் 2026-ம் ஆண்டு அக்டோபர் மாதம் போட் கிளப் நிலையத்தை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிகழ்ச்சியில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் பொது மேலாளர் ஆர்.ரங்கநாதன் (கட்டுமானம்), சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், பொது ஆலோசகர்கள் மற்றும் ஒப்பந்த நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story