சிதம்பரம் கோவில் நகைகள் ஆய்வுக்கு கால அவகாசம் கோரி அறநிலையத்துறைக்கு தீட்சிதர்கள் கடிதம்


சிதம்பரம் கோவில் நகைகள் ஆய்வுக்கு கால அவகாசம் கோரி அறநிலையத்துறைக்கு தீட்சிதர்கள் கடிதம்
x

கோவில் நகைகள் மற்றும் கணக்கு விவரங்கள் தொடர்பான ஆய்வுக்கு அவகாசம் கோரி அறநிலையத்துறைக்கு தீட்சிதர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

கடலூர்,

உலக பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான நகைகளை சரிபார்ப்பு செய்வதற்கு வருகின்ற 25 ஆம் தேதி இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் வர உள்ளதாக கோவில் தீட்சிதர்களுக்கு அறநிலையத்துறை சார்பில் கடந்த 19 ஆம் தேதி கடிதம் அனுப்பப்பட்டது.

இதற்கு கோவில் செயலாளர் ஹேம சபேச தீட்சிதர் பதில் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் அவர், சிதம்பரம் நடராஜர் கோவில் நகைகள் மற்றும் கணக்கு விவரங்கள் தொடர்பான ஆய்வுக்கு அவகாசம் வழங்க வேண்டும் என அறநிலையத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் சட்ட விதிமுறைப்படி கோவில் நகைகள் கங்காணம் 20 நபர்கள் கூட்டுப் பொறுப்பில் உள்ளதாகவும், தற்போது உறுப்பினர்கள், வழக்கறிஞர் மற்றும் தணிக்கையாளர் ஆகியோர் பல்வேறு வெளியூர், வெளி மாநிலங்களுக்குச் சென்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, ஆகஸ்ட் மாதம் 2-வது வாரத்திற்கு பின் அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வுக்கு வரலாம் என்றும், முன்கூட்டியே தேதி அறிவித்து, பின்னர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்வதாகவும் அந்த கடிதத்தில் ஹேம சபேச தீட்சிதர் தெரிவித்துள்ளார்.


Next Story