ரெயில் விபத்தை தடுத்த தம்பதிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெகுமதி வழங்கினார்


ரெயில் விபத்தை தடுத்த தம்பதிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெகுமதி வழங்கினார்
x

ரெயில் விபத்தை தடுத்த தம்பதிக்கு வெகுமதியாக ரூ.5 லட்சத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை,

தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டம், புளியரை கிராமப் பகுதியில் (25-2-2024) அன்று நள்ளிரவு லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டு செங்கோட்டை - கொல்லம் ரெயில் மார்க்கத்திலுள்ள தண்டவாளத்தில் விழுந்தது. அப்போது செங்கோட்டையிலிருந்து புனலூர் நோக்கி வந்து கொண்டிருந்த ரெயிலை அப்பகுதியில் வசித்து வந்த தம்பதியர் சண்முகையா-வடக்குத்தியாள் ஆகியோர் தண்டவாளத்தில் ஓடிச்சென்று டார்ச் லைட் ஒளியின் மூலம் ரெயில் ஓட்டுநருக்கு சைகை காண்பித்து, ரெயிலை தடுத்து நிறுத்தினர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

அத்தம்பதியரின் வீரதீர செயலுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்தனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த தம்பதிக்கு பாராட்டு தெரிவித்து ரூ.5 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என அறிவித்தார்.

அதன்படி, புளியரை தம்பதி சண்முகையா-வடக்குத்தியாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று சந்தித்தனர். அப்போது அவர்களுக்கு முதல்-அமைச்சர் பொன்னாடை அணிவித்து, பாராட்டு தெரிவித்தார். மேலும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 5 லட்சத்திற்கான காசோலையை வெகுமதியாக வழங்கினார்.


Next Story