கோவில்பட்டியில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு


கோவில்பட்டியில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
x

தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்களுடன் கலந்துரையாடி, அவர்களின் கோரிக்கைகளை முதல்-அமைச்சர் கேட்டறிந்தார்.

தூத்துக்குடி,

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டம் தோறும் சென்று பல்வேறு பணிகளை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். அதன்படி தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வருகை தந்தார்.

முதற்கட்டமாக கன்னியாகுமரியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரை நடைபயணத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து நெல்லையில் நடைபெற்ற பிரமாண்டமான அரசு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி எட்டயபுரம் சாலையில் உள்ள தனியாருக்கு சொந்தமான தீப்பெட்டி தொழிற்சாலையில் முதல்-அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு பணியாற்றும் தொழிலாளர்களுடன் கலந்துரையாடி, அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

இதையடுத்து கோவில்பட்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள குழந்தைகள் நலப்பிரிவு மற்றும் மகப்பேறு மருத்துவ கட்டிடங்களை திறந்து வைக்கிறார். அதைத் தொடர்ந்து சாலை மார்க்கமாக மதுரை சென்று, அங்கிருந்து முதல்-அமைச்சர் சென்னை புறப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story