அரியலூர் ஆக்கி வீரர் கார்த்திக் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியதவி வழங்கினார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


அரியலூர் ஆக்கி வீரர் கார்த்திக் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியதவி வழங்கினார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 28 Nov 2022 5:05 PM GMT (Updated: 28 Nov 2022 5:10 PM GMT)

ஆக்கி வீரர் கார்த்திக் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி மற்றும் வீடு ஒதுக்கீட்டு ஆணையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

அரியலூர்,

அரியலூர் ஜெ.ஜெ.நகரை சேர்ந்த கார்த்திக் செல்வம், கடந்த மே மாதம் இந்திய ஆக்கி அணிக்கு தேர்வாகினார். ஆசிய கோப்பையில் பங்கேற்று, வெண்கலப்பதக்கம் வென்ற அணியில் இடம் பெற்றிருந்தார். மேலும், 2023 ஜனவரியில் ஒடிசாவில் நடைபெறும் உலகக்கோப்பை போட்டிக்கான அணியில் இடம்பெற்றுள்ள கார்த்தி செல்வம், தற்போது பெங்களுருவில் நடைபெறும் பயிற்சி முகாமில் பங்கேற்று பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

இவரது தந்தை செல்வம், அரியலூர் அரசுக் கல்லூரியில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். அவரது தாய் வளர்மதி வீட்டு வேலை செய்து வருகிறார். இருவருக்கும் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் கார்த்திக் செல்வத்தை போட்டியில் பங்கேற்க தயார் படுத்தி வந்தனர். இவர்களது ஏழ்மை நிலை குறித்து ஊடகங்களில் செய்தி வெளியாகி இருந்தன.

இந்நிலையில் ஆக்கி வீரர் கார்த்திக் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி மற்றும் பசுமை வீடு திட்டத்தின்கீழ் வீடு கட்டுவதற்கான ஆணையயும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இதன்படி 2022ஆம் ஆண்டு ஆசிய கோப்பை ஆக்கி போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்று, தமிழகத்திற்கு பெருமை சேர்த்த அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்திய ஆக்கி அணி வீரர் எஸ். கார்த்திக் அவர்களின் இல்லத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று, தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் அரியலூர் மாவட்டம், குரும்பஞ்சாவடி திட்டப்பகுதியில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீட்டிற்கான ஆணையினை அவரது குடும்பத்தினரிடம் வழங்கினார்.




Next Story