நாகை மீனவர்கள் 9 பேரை விடுவிக்கக்கோரி ஜெய்சங்கருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
![நாகை மீனவர்கள் 9 பேரை விடுவிக்கக்கோரி ஜெய்சங்கருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் நாகை மீனவர்கள் 9 பேரை விடுவிக்கக்கோரி ஜெய்சங்கருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்](https://media.dailythanthi.com/h-upload/2022/08/12/819283-stalin33.webp)
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நாகை மீனவர்கள் 9 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
சென்னை,
தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லும் போதெல்லாம் , குறிப்பாக, நாகை, ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்லும் போதெல்லாம், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்யும் நடவடிக்கை தொடர் கதையாகி வருகிறது.
அதே போல, கடந்த 10ஆம் தேதி நாகபட்டினம் பகுதி மீனவர்கள், இலங்கை எல்லையில் உள்ள முல்லை தீவு அருகே மீன்பிடித்ததாக கூறி, தமிழக மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து உள்ளனர். மேலும், அவர்கள் படகுகளையும் கைப்பற்றி உள்ளனர்.
இது குறித்து, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். நாகை மீனவர்கள் 9 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரியும், தமிழ்நாடு மீனவர்களின் மீன்பிடிப் படகினையும் விரைவில் விடுவிக்க நடவடிக்கை தேவை என அக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.