முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட சிறப்பு முகாம்: 2,873 குடும்பங்கள் பயன் - அமைச்சர் கீதாஜீவன் தகவல்


முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட சிறப்பு முகாம்: 2,873 குடும்பங்கள் பயன் - அமைச்சர் கீதாஜீவன் தகவல்
x

கோப்புப்படம் 

முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட சிறப்பு முகாம் தூத்துக்குடியில் நடைபெற்றது.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் நடைபெற்ற முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட சிறப்பு முகாம் மூலம் 2,873 குடும்பத்தினர் பயன்பெற்றுள்ளனர் என்று சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட சிறப்பு முகாம், தூத்துக்குடி புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இந்த முகாமில் முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத் திட்ட பணியாளர்கள், அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு முகாமிலேயே வருமான சான்று உடனே வழங்கப்பட்டு அவர்களுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டைக்கான இணையதளம் வழியாக புகைப்படம் எடுக்கப்பட்டது. இந்த முகாமில் 573 பேருக்கு பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு புகைப்படம் எடுக்கப்பட்டது. ஏற்கனவே கலைஞர் காப்பீட்டுத் திட்ட அட்டை வைத்திருக்கும் 630 பேருக்கு இந்த முகாமில் சரிபார்க்கப்பட்டு இணையதளம் வழியாக அவர்களுக்குரிய எண்களை குறித்து கொடுத்து "இ" சேவை மையத்தில் அவரவர் எண்ணை குறிப்பிட்டு காப்பீட்டு அட்டை பெற்றிட தெரிவிக்கப்பட்டது.

மேலும், முகாமில் பொதுமக்கள் அதிக பேர் கலந்து கொண்டதால் அவர்களுக்கு கிராம நிர்வாக அலுவலரிடம் வருமானச் சான்று பெற்று கொடுக்கப்பட்டது. அவர்கள் இன்று (புதன்கிழமை) முதல் 7.2.2024 வரை தினமும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள காப்பீடு திட்ட அலுவலகத்தில், அவரவர்களுக்கு குறிப்பிட்ட தேதிகளில் சென்று புகைப்படம் எடுத்திட 1,670 பேருக்கு உரிய அலுவலர்கள் மூலம் டோக்கன் வழங்கப்பட்டது. இந்த சிறப்பு முகாம் மூலம் 2 ஆயிரத்து 873 குடும்பங்கள் பயன் பெற்றுள்ளனர்.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.


Next Story