அனுமதி இன்றி டிரோன் கேமரா மூலம் சினிமா படப்பிடிப்பு - 3 பேர் கைது


அனுமதி இன்றி டிரோன் கேமரா மூலம் சினிமா படப்பிடிப்பு - 3 பேர் கைது
x

அனுமதி இன்றி டிரோன் கேமரா மூலம் சினிமா படப்பிடிப்பு நடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை

சென்னை ஐகோர்ட்டு வளாகம் , எஸ்பிளேடு போலீஸ் நிலையம், என்.எஸ்.சி. போஸ் ரோடு, பார் கவுன்சில் வளாகம் ஆகிய பகுதிகளில் டிரோன் கேமராவை பறக்கவிட்டபடி 3 பேர் வீடியோ படம் எடுத்து கொண்டிருந்தனர்.

ஐகோர்ட்டு வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், இதனை பார்த்து எஸ்பிளனேடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்். உடனடியாக இன்ஸ்பெக்டர் காளிராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று டிரோன் கேமரா பறக்கவிட்டு படம் பிடித்த 3 பேரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். அவர்களிடம் இருந்த டிரோன் கேமராவை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் அவர்களது பெயர், நவீன்குமார், சுரேஷ், ரூபேஷ், என்பதும், இவர்கள் இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி நடிக்கும் 'பிச்சைக்காரன் 2' என்ற படத்தின் சினிமா படப்பிடிப்பு குழுவினர் என்பதும் தெரியவந்தது.

மேலும் இவர்கள், அந்த படத்துக்காக சென்னை ரிப்பன் மாளிகை கட்டிடம் மற்றும் அரசு ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரி ஆகிய பகுதிகளில் டிரோன் கேமரா மூலம் படப்பிடிப்பு நடத்த அனுமதி பெற்று இருந்தனர். ஆனால் நேற்று முன்தினம் இந்த பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தி விட்டு அப்படியே சென்னை ஐகோர்ட்டு வளாகம், என்.எஸ்.சி. போஸ்ரோடு, எஸ்பிளனேடு போலீஸ் நிலையம் ஆகியவற்றையும் அனுமதி பெறாமல் டிரோன் கேமராவை பறக்க விட்டு படம்பிடித்தது தெரிந்ததது.

விசாரணைக்கு பிறகு 3 பேரையும் கைது செய்த போலீசார், பின்னர் அவர்களை காவல் நிலைய ஜாமீன் வழங்கி எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.


Next Story