வேலூர் அரசு தொழில் பயிற்சி நிலைய வளாகத்தில் ரூ.30 கோடியில் 'மினி டைடல்' பூங்கா கட்டிடம்


வேலூர் அரசு தொழில் பயிற்சி நிலைய வளாகத்தில் ரூ.30 கோடியில் மினி டைடல் பூங்கா கட்டிடம்
x

வேலூர் அரசு தொழில் பயிற்சி நிலைய வளாகத்தில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள ‘மினி டைடல்’ பூங்கா கட்டிடத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

அரசு அறிவிப்பு

பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சியில் இந்தியாவிலேயே முன்னணி மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு விளங்கி வருகிறது. முதலீடுகளை பெருமளவில் ஈர்த்து, லட்சக்கணக்கான தமிழக இளைஞர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசு மாநில பொருளாதாரத்தை வலுவடைய செய்து வருகிறது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிர்ணயித்துள்ள இலக்கான 2030-31-ம் ஆண்டிற்குள் தமிழ்நாடு ஒரு 'டிரில்லியன்' அமெரிக்க டாலர் பொருளாதார வளர்ச்சியை அடைய முதலீடுகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது.

2021-2022-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள 2-ம் மற்றும் 3-ம் நிலை நகரங்களிலும் 'டைடல்' பூங்காக்கள் உருவாக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. அதன்படி, முதற்கட்டமாக விழுப்புரம் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 'மினி டைடல்' பூங்காக்கள் அமைப்பதற்கு 24.6.2022 அன்று முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

அடிக்கல் நாட்டினார்

அதன் தொடர்ச்சியாக, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் வேலூர் மாவட்டம், மேல்மொனவூர்-அப்துல்லாபுரத்தில் உள்ள அரசு தொழில் பயிற்சி நிலைய வளாகத்தில், 4.98 ஏக்கர் நிலப்பரப்பளவில் 'மினி டைடல்' பூங்கா அமைப்பதற்கு ரூ.30 கோடி மதிப்பீட்டில் தரை மற்றும் 4 தளங்களுடன் 60 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டப்படவுள்ள 'மினி டைடல்' பூங்காவிற்கான கட்டிடத்திற்கு முதல்-அமைச்சர் நேற்று தலைமைச் செயலகத்தில் அடிக்கல் நாட்டினார்.

இதன்மூலம் வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் படித்த இளைஞர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு அவர்களின் சொந்த மாவட்டத்திலேயே தங்கி தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளில் வேலைவாய்ப்பு பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படும். அதன் மூலம் சமூக பொருளாதார வளர்ச்சியும் ஏற்படும்.

ஓலா நிறுவனம் ஒப்பந்தம்

ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனம் தனது துணை நிறுவனங்களான ஓலா செல் டெக்னாலஜீஸ் மற்றும் ஓலா எலக்ட்ரிக் டெக்னாலஜீஸ் மூலமாக முதற்கட்டமாக, மின்கல உற்பத்தி ஆலை மற்றும் மின் வாகன உற்பத்தி ஆலையை நிறுவ முன்வந்துள்ளது. இத்திட்டத்தில் உறுதி செய்யப்பட்ட முதலீடு ரூ.7,614 கோடியாகும். இதில் ஓலா செல் டெக்னாலஜீஸ் நிறுவனம் ரூ.5,114 கோடியும், ஓலா எலக்ட்ரிக் டெக்னாலஜீஸ் நிறுவனம் ரூ.2,500 கோடியும் முதலீடு செய்யவுள்ளன. இதன்மூலம் 3,111 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இத்திட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உள்ள சிப்காட் பர்கூர் தொழிற்பூங்காவில் நிறுவப்பட உள்ளது.

இதன்மூலம் 1.40 லட்சம் 4 சக்கர மின்சார வாகனங்கள் உற்பத்தி மற்றும் 20 கிகாவாட் மின்கலன்கள் உற்பத்தித்திறன் கொண்ட ஆலைகளை அமைப்பதற்கு இந்நிறுவனம் திட்டமிட்டு உள்ளது. அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், தமிழக அரசுக்கும் ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனத்திற்கும் இடையே முதல்-அமைச்சர் முன்னிலையில் தலைமைச் செயலகத்தில் மேற்கொள்ளப்பட்டது.

திரவ ஆக்சிஜன் உற்பத்தி

ஐநாக்ஸ் ஏர் ப்ராடக்ட்ஸ் நிறுவனம், நாடு முழுவதும் 43 இடங்களில் மருத்துவம் மற்றும் தொழிற்சாலைகளுக்கு தேவைப்படும் வாயு உற்பத்தி மேற்கொண்டு வருகிறது. இந்நிறுவனம் கொரோனா பெருந்தொற்று காலத்தில் தொடர்ந்து இயங்கி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆஸ்பத்திரிகளுக்கும் திரவ ஆக்சிஜனை தங்கு தடையின்றி வழங்குவதை உறுதி செய்தது.

தற்போது ரூ.150 கோடி முதலீடு மற்றும் 105 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் ஓசூர் தொழிற்பூங்காவில் இந்நிறுவனம் நிறுவியுள்ள புதிய 200 டி.பி.டி. திறன் கொண்ட அதிஉயர் தூய்மையான திரவ மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலையை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.

ஜி.எக்ஸ். குழுமம்

ஜி.எக்ஸ். குழுமம் எப்.டி.டி.எச். (பைபர் டு ஹோம்) என்ற துறையில் ஐரோப்பிய சந்தைகளில் முன்னணி வகிக்கும் நிறுவனமாகும். இந்நிறுவனம், கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.110 கோடி முதலீடு மற்றும் 100 உயர்தர தொழில்நுட்ப பொறியியல் பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில், சென்னையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் அமைக்க தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.

அதன்படி, குறுகிய காலத்திலேயே சென்னை துரைப்பாக்கத்தில் ரூ.110 கோடி செலவில் நிறுவப்பட்டுள்ள ஜி.எக்ஸ். குழுமத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.


Next Story