இலங்கைக்கு பீடி இலைகளை கடத்த முயன்ற கும்பலை நடுக்கடலில் விரட்டிய கடலோர காவல்படை; மூட்டைகளை கடலில் வீசி தப்பிய கும்பல் - பரபரப்பு வீடியோ


x

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.17 லட்சம் மதிப்பிலான பீடி இலையை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு சமீப காலமாக மஞ்சள், பீடி இலை, களைக்கொல்லி மருந்து உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்பட்டு வருகின்றன. இதனை அவ்வப்போது கியூ பிரிவு போலீசார், கடலோர பாதுகாப்பு போலீசார் மடக்கி பிடித்து வருகின்றனர். அதே போன்று போதை பொருட்கள் கடத்தலும் நடந்து வருகிறது.

இதனால் கடற்கரையோரம் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் தொடர்ந்து கடத்தல் சம்பவங்கள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் தூத்துக்குடி தருவைகுளம் அருகே உள்ள கடற்கரையில் இருந்து இலங்கைக்கு பீடி இலை கடத்தப்படுவதாக தூத்துக்குடி மாவட்ட கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயஅனிதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜீவமணி தர்மராஜ், வேல்ராஜ் மற்றும் போலீசார் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, போலீசை பார்த்ததும் கடற்கரையில் இருந்த ஒரு படகு வேகமாக கடலுக்குள் புறப்பட்டு சென்றது.

இதைத் தொடர்ந்து போலீசார் மீனவர்கள் உதவியுடன் கடலுக்குள் சென்ற படகை விரட்டி சென்றனர். அப்போது அந்த படகில் இருந்தவர்கள், மறைத்து வைத்து இருந்த மூட்டைகளை தூக்கி கடலில் வீசினர். பின்னர் அங்கிருந்து வேகமாக தப்பி சென்று விட்டனர். இதனால் கியூ பிரிவு போலீசார் கடலில் மிதந்து வந்த மூட்டைகளை சேகரித்தனர்.

மொத்தம் 38 மூட்டைகள் இருந்தன. அந்த மூட்டைகளை ஆய்வு செய்த போது, ஒவ்வொரு மூட்டையிலும் சுமார் 45 கிலோ எடை கொண்ட பீடிஇலைகள் இருந்தன. மொத்தம் சுமார் 1700 கிலோ பீடி இலைகள் பதுக்கப்பட்டு இருந்தன. இதன் இலங்கை மதிப்பு சுமார் ரூ.17 லட்சம் என்று கூறப்படுகிறது.

மேலும் கியூ பிரிவு போலீசார் பீடி இலை மூட்டைகளை கடலில் வீசிவிட்டு தப்பி சென்றவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story