கோவை கார் சிலிண்டர் வெடிப்பு: முழு சதியையும் வெளிக் கொணர்ந்து மக்களின் அச்சத்தை போக்க வேண்டும் - மநீம வலியுறுத்தல்


கோவை கார் சிலிண்டர் வெடிப்பு: முழு சதியையும் வெளிக் கொணர்ந்து மக்களின் அச்சத்தை போக்க வேண்டும் - மநீம வலியுறுத்தல்
x

கோவை கார் சிலிண்டர் வெடிப்புச் சம்பவத்தில் முழு சதியையும் வெளிக் கொணர்ந்து மக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.

சென்னை,

மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் தங்கவேலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கோவை உக்கடம் பகுதியில் கார் சிலிண்டர் வெடிப்புச் சம்பவத்தில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி வருவது மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதில் பலியானவரின் பின்னணியும், அவருடன் நெருக்கமாக இருந்தவர்கள் குறித்த தகவல்களும் பீதியூட்டும் வகையில் உள்ளன.

இதில் காவல் துறையினரின் விரைவான செயல்பாடுகளும், 5 பேரைக் கைது செய்துள்ளதும் பாராட்டுக்குரியவை. அதேசமயம், முழு சதியையும் கண்டுபிடித்து, சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பின்னணியில் வெளிநாட்டுத் தீவிரவாத கும்பல் இருக்கிறதா என்றும் தீர விசாரிக்க வேண்டும்.

1998-ல் தொடர் குண்டுவெடிப்பால் நிலைகுலைந்த கோவை, அதிலிருந்து மீண்டுவர பல ஆண்டுகளாகின. அமைதியையும், தொழில் நகரின் வளர்ச்சியையும் குலைக்க முயற்சிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். மக்கள் அச்சமின்றி வாழ்வதை உறுதிப்படுத்த தமிழக அரசும், காவல் துறையும் தீவிர நடவடிக்கை எடுப்பது அவசியம்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


Next Story