மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை - கலெக்டர் வழங்கினார்


மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை - கலெக்டர் வழங்கினார்
x

மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை கலெக்டர் ஆர்த்தி வழங்கினார்.

காஞ்சிபுரம்

தேசிய குடற்புழு நீக்க நாளையொட்டி காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி வழங்கி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள 1 முதல் 19 வயது வரை உள்ள 3 லட்சத்து 81 ஆயிரத்து 186 குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கும், 30 வயது வரை உள்ள 83 ஆயிரத்து 997 பெண்களுக்கு (கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தவிர) குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டு வருகிறது.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து குழந்தைகள், மாணவர்கள் மற்றும் பெண்களுக்கு சுகாதார துறை, குழந்தை வளர்ச்சி துறை, சமூக வளர்ச்சி துறை மற்றும் பள்ளிக் கல்வி துறை பணியாளர்கள் மூலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் போன்ற இடங்களில் குடற்புழு நீக்க மாத்திரைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சிறப்பு முகாம் காஞ்சீபுரம் மாவட்ட துணை இயக்குனர் பா.பிரியாராஜ் மற்றும் 2-ம் நிலை அலுவலர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. விடுபட்ட குழந்தைகள், மாணவர்கள் மற்றும் பெண்களுக்கு வருகிற 16-ந்தேதி அன்று குடற்புழு மாத்திரை அளிக்கப்பட உள்ளது.

இதன் மூலம் ஒட்டு மொத்த குடற்புழுக்களை நீக்கி குழந்தைகளின் ஆரோக்கியத்தை பேணி காக்க மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களும் தகுந்த ஒத்துழைப்பு நல்கி அனைவரும் குடற்புழு மாத்திரைகளை உட்கொள்ளவும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story