குறவர் சமூகத்தை சேர்ந்த 15 குடும்பங்களுக்கு குடும்ப அட்டை வழங்க வேண்டும்- கலெக்டர் லலிதா


குறவர் சமூகத்தை சேர்ந்த 15 குடும்பங்களுக்கு  குடும்ப அட்டை வழங்க வேண்டும்- கலெக்டர் லலிதா
x
தினத்தந்தி 1 Oct 2022 6:30 PM GMT (Updated: 1 Oct 2022 6:30 PM GMT)

குறவர் சமூகத்தை சேர்ந்த 15 குடும்பங்களுக்கு குடும்ப அட்டை வழங்க வேண்டும் என கலெக்டர் லலிதா உத்தரவிட்டார்.

மயிலாடுதுறை

குறவர் சமூகத்தை சேர்ந்த 15 குடும்பங்களுக்கு குடும்ப அட்டை வழங்க வேண்டும் என கலெக்டர் லலிதா உத்தரவிட்டார்.

கலெக்டருக்கு கோரிக்கை

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா காழியப்பநல்லூர் கிராமம் மருதம்நகர் பகுதியில் கடந்த மாதம் (செப்டம்பர்) 29-ந் தேதி மாவட்ட கலெக்டர் லலிதா ஆய்வு செய்தார். அப்போது அங்கு வசித்து வரும் 15 குடும்பங்களை சேர்ந்த குறவர் இன மக்கள், தங்களுக்கு தார்ச் சாலை வசதி, மின் வசதி, தெருவிளக்கு வசதி செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

மேலும், தாங்கள் சுடுகாடு பகுதிக்கு அருகில் வசித்து வருவதால் மாற்று இடம் தேர்வு செய்து தரக்கோரியும், தாங்கள் வசிக்கும் இடத்திற்கு பட்டா வழங்க கோரியும், அரசின் பல்வேறு சலுகைகளை பெறுவதற்காக. பழங்குடியினர் சாதி சான்று அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

குடும்ப அட்டை வழங்க உத்தரவு

வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அடையாள அட்டை, குடும்ப அட்டை ஆகியவற்றை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

இதுதொடர்பான கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் உடனடியாக பரிசீலித்து சம்பந்தப்பட்ட 15 குடும்பங்களுக்கும் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அடையாள அட்டை, குடும்ப அட்டை ஆகியவற்றை வழங்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

பழங்குடியினர் சாதி சான்று வழங்க தமிழக அரசின் விதிமுறைப்படி உரிய ஆய்வு மேற்கொண்டு, பரிசீலனை செய்து அதை விரைந்து வழங்கவும் கலெக்டர் உத்தரவிட்டார்.

உணவு

மேலும் அந்த பகுதியை சேர்ந்த 15 குடும்பத்தினர் சிங்கனோடை குழந்தைகள் மையத்தின் பயனாளியாக சேர்க்கப்பட்டு காலை சிற்றுண்டி, மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.


Next Story