கரூர் மாவட்டத்தில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் வைக்க கலெக்டர் வேண்டுகோள்


கரூர் மாவட்டத்தில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் வைக்க கலெக்டர் வேண்டுகோள்
x

கரூா் மாவட்டத்தில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ைவக்க ேவண்டும் என கலெக்டர் பிரபுசங்கா் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கரூர்

ஆலோசனை கூட்டம்

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலை நிறுவும் அமைப்பாளர்களுடன் சிலைகள் வைத்து வழிபடுவது மற்றும் கரைப்பதற்கான வழிகாட்டுதல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் முன்னிலை வகித்தார்.

அப்போது கலெக்டர் பிரபுசங்கா் தெரிவித்ததாவது:- விநாயகர் சிலையை நிறுவ விரும்பும் எந்தவொரு அமைப்பாளரும், முன்கூட்டியே துறை அதிகாரிகளிடம் தடையில்லா சான்றிதழ் பெற்று நகரங்களில் காவல் உதவி ஆணையர்களிடமும், மாவட்டங்களில் வருவாய் கோட்டாட்சியரிடமும் விண்ணப்பிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட நில உரிமையாளரிடம் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும் அல்லது பொது நிலமாக இருந்தால் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள், நெடுஞ்சாலைகள் அல்லது சம்பந்தப்பட்ட துறையிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும். சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய பொறுப்பு அதிகாரிகளிடமிருந்து (ஒலி பெருக்கி உரிமம், அனுமதி உள்பட) சான்றிதழ் பெறவேண்டும்.

மாசுபடும் ரசாயனம் கூடாது

தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையிடமிருந்து தீ பாதுகாப்பு தரச்சான்றிதழ் பெறவேண்டும். சிலைகள் தூய்மையான களிமண்ணால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். தடை செய்யப்பட்ட மாசுபடுத்தும் ரசாயனங்களால் வர்ணம் பூசப்பட்டதாக இருக்கக்கூடாது. மேலும் பந்தல்கள் அமைக்கப்படும் போது எளிதாக நுழைந்து வெளியேறுவதற்கு போதுமான அகலமான நுழைவுவாயில் அமைக்க வேண்டும். சிலையின் உயரம் அடித்தளம் மற்றும் மேடை உள்பட 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். பிற மத தலங்கள் மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் ஆட்சேபணை தெரிவிக்கும் இடங்களில் சிலைகளை நிறுவுதல் தவிர்க்கப்பட வேண்டும்.

ஒலிபெருக்கி உரிமம் காலையில் 2 மணி நேரமும், மாலையில் 2 மணி நேரமும் மட்டுமே வழங்கப்படும். கூம்பு வடிவ ஒலிபெருக்கி தடை செய்யப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்படாத மின்பயன்பாடு மற்றும் மின்சாரம் திருடுதல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்கள் எதுவும் நடைபெறாமல் இருப்பதை விழா குழுவினர் உறுதி செய்ய வேண்டும்.

பட்டாசு வெடிக்க கூடாது

சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்ட சிலை கரைக்கும் இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும். ஊர்வலம் காவல்துறையால் பரிந்துரைக்கப்பட்ட வழித்தடங்களில் கொண்டு செல்லப்பட்டு. குறிப்பிட்ட இடங்களில் கரைக்கப்பட வேண்டும். மினி லாரி, டிராக்டரில் சிலைகளை மட்டுமே செல்ல பயன்படுத்தப்பட வேண்டும். மாட்டு வண்டி அல்லது மூன்று சக்கர வாகனங்கள் அனுமதிக்கப்படாது. விநாயகர் சிலை நிறுவும் இடங்கள், கரைக்கும் இடங்கள், ஊர்வல பாதைகளில் பட்டாசு வெடிக்க அனுமதி இல்லை. விழா குழுவினர் இந்த வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு அவா் கூறினார்.


Next Story