குன்றத்தூர் அருகே சாலை தடுப்புச்சுவரில் மோதிய கல்லூரி பஸ்: 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம்


குன்றத்தூர் அருகே சாலை தடுப்புச்சுவரில் மோதிய கல்லூரி பஸ்: 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம்
x

குன்றத்தூர் அருகே சாலை தடுப்புச்சுவரில் மோதி கல்லூரி பஸ் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் காயமடைந்தனர்.

சென்னை

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த இருங்காட்டுகோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் ஏராளமான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். நேற்று காலை நந்தம்பாக்கத்தில் இருந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு கல்லூரி பஸ், கல்லூரி நோக்கி சென்று கொண்டிருந்தது. பஸ்சை டிரைவர் மோகன்ராம் என்பவர் ஓட்டி சென்றார். பஸ்சில் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் அமர்ந்திருந்தனர். குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கம், சிறுகளத்தூர் அருகே குன்றத்தூர்-ஸ்ரீபெரும்புதூர் சாலையில் பஸ் சென்ற போது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டு இழந்து சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் பஸ் மோதியது.

இந்த விபத்தில் பஸ்சின் முன்பகுதி நொறுங்கி பலத்த சேதமடைந்தது. பஸ்சில் அமர்ந்திருந்த கல்லூரி மாணவ, மாணவிகள் ஒருவர் மீது ஒருவர் மோதி கொண்டதில் டிரைவர் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

விபத்தை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் விரைந்து வந்து ஆம்புலன்சு மூலம் காயம் அடைந்தவர்களை மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் குன்றத்தூரை சேர்ந்த ஹேமா (வயது 19) என்ற மாணவிக்கு காலிலும், கழுத்திலும் பலத்த காயம் ஏற்பட்டதில் அவர் மட்டும் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

பின்னர் விபத்தில் சிக்கிய கல்லூரி பஸ்சை கிரேன் மூலம் அப்புறப்படுத்தி சாலையின் ஓரமாக நிறுத்தினார்கள். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குன்றத்தூர் போலீசார் போக்குவரத்து சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். சாலையில் அதி வேகமாக கல்லூரி பஸ் சென்றதே இந்த விபத்துக்கு காரணம் என் விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.


Next Story