வியாசர்பாடியில் தீ மிதி திருவிழாவில் கல்லூரி மாணவர்கள் மோதல்; 7 பேர் கைது - பெண்ணிடம் 4 பவுன் நகை பறிப்பு


வியாசர்பாடியில் தீ மிதி திருவிழாவில் கல்லூரி மாணவர்கள் மோதல்; 7 பேர் கைது - பெண்ணிடம் 4 பவுன் நகை பறிப்பு
x

வியாசர்பாடியில் நடந்த தீ மிதி திருவிழாவில் கல்லூரி மாணவர்கள் மோதிக்கொண்டனர். இது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டார். அதே திருவிழாவில் பெண்ணிடம் 4 பவுன் நகையை மர்மநபர்கள் பறித்து சென்றனர்.

சென்னை

சென்னை வியாசர்பாடி எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை காந்தி நகரில் உள்ள பீலிகான் கோவிலில் நேற்று முன்தினம் இரவு தீ மிதி திருவிழா நடைபெற்றது. இதில் காப்புகட்டி விரதம் இருந்த பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

இந்த விழாவில் பங்கேற்ற கல்லூரி மாணவர்கள் சிலர் திடீரென மோதலில் ஈடுபட்டனர். இருதரப்பு மாணவர்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் இருதரப்பையும் சேர்ந்த 2 பேர் காயம் அடைந்து சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதுபற்றி எம்.கே.பி. நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இரு தரப்பினரையும் சேர்ந்த 7 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

முன்னதாக இந்த தீ மிதி திருவிழாவில் கொடுங்கையூர் கட்டபொம்மன் தெருவைச் சேர்ந்த ராஜன், தன்னுடைய மனைவி கனிமொழி (வயது 35) மற்றும் குடும்பத்துடன் கலந்து கொண்டார். அப்போது அன்னதானம் வழங்கப்பட்டது.

கனிமொழி அன்னதானம் பெற கூட்டத்தோடு கூட்டமாக நின்று கொண்டிருந்தார். மர்மநபர்கள் கூட்ட நெரிசலை பயன்படுத்தி கனிமொழி கழுத்தில் கிடந்த 4 பவுன் தாலி சரடை பறித்து சென்று விட்டனர்.

இது குறித்து எம்.கே.பி. நகர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.


Next Story