பட்டாபிராமில் கம்பெனி உரிமையாளர் தற்கொலை - பூட்டிய வீட்டுக்குள் பிணமாக தொங்கினார்


பட்டாபிராமில் கம்பெனி உரிமையாளர் தற்கொலை - பூட்டிய வீட்டுக்குள் பிணமாக தொங்கினார்
x

பட்டாபிராமில் பூட்டிய வீட்டுக்குள் கம்பெனி உரிமையாளர் தூக்கில் பிணமாக தொங்கினார்.

சென்னை

ஆவடி அடுத்த பட்டாபிராம் அம்பேத்கர் நகர் இளங்கோ தெருவை சேர்ந்தவர் நடராஜன் (வயது 54). இவர், மண்ணூர்பேட்டை பகுதியில் தனியாக கம்பெனி வைத்து நடத்தி வந்தார். இவருடைய மனைவி மாலதி (46). இவர்களுக்கு பரத் (19) என்ற மகனும், ஷாலினி பிரியா (15) என்ற மகளும் உள்ளனர்.

கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததால் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு மாலதி தனது மகன், மகளுடன் கோயம்பேடு எம்.எம்.டி.ஏ. பகுதியில் வசிக்கும் தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். நடராஜன் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

கடந்த சில நாட்களாக நடராஜன் வீடு பூட்டியே கிடந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் பட்டாபிராம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர்.

வீட்டின் படுக்கை அறையில் அமர்ந்த நிலையில், மேலே உள்ள மின்விசிறியில் நடராஜன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிந்தது. அவர் உடல் முழுவதும் அழுகி இருந்தது. அவர் இறந்து 3 நாட்கள் ஆகி இருக்கலாம் என தெரிகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

மணலி புதுநகர் எல்.ஐ.சி. தெருவை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 28). இவர் தனியார் கம்பெனியில் சமையல்காரராக வேலை பார்த்து வந்தார். குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இதனால் யுவராஜுக்கும், அவரது தாய் ராதாவுக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டதாக தெரிகிறது.

நேற்று தாயிடம் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு மாடியில் உள்ள அறைக்கு சென்ற யுவராஜ், அங்கு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி மணலி புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.


Next Story