தேர்வு முறைகேடு புகார்: பிளஸ் 2 மாணவர்கள் 34 பேர் கணித பாடத்தில் தோல்வி அடைந்ததாக அறிவிப்பு


தேர்வு முறைகேடு புகார்: பிளஸ் 2 மாணவர்கள் 34 பேர் கணித பாடத்தில் தோல்வி அடைந்ததாக அறிவிப்பு
x

தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், 34 மாணவர்களும் கணித தேர்வில் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ் 2 பொதுத்தேர்வின் போது கணித தேர்வில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உதவியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், குற்றச்சாட்டு உறுதியானதால் தேர்வு கண்காணிப்பாளர் உள்ளிட்ட 5 பேரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் நேற்றைய தினம் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. ஆனால் குறிப்பிட்ட அரசு உதவி பெறும் பள்ளியில் அறை எண் 3 மற்றும் 4-ல் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கணித பாடத்திற்கான தேர்வு முடிவுகள் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது 34 மாணவர்களும் கணித தேர்வில் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மாணவர்களும், அவர்களது பெற்றோரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதில் சில மாணவர்கள் நீட் தேர்வு உள்ளிட்ட தேர்வுகளுக்கு தயாராகி வருவதால், கணித பாடத்தில் தோல்வி என்று அறிவிக்கப்பட்டுள்ளது அவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் எனவும், இது தொடர்பாக முறையாக விசாரணை நடத்தி நல்ல முடிவை எடுக்க வேண்டும் எனவும் பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.



Next Story