கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகத்தில் தி.மு.க. கவுன்சிலர்கள் இடையே மோதல், அடிதடி


கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகத்தில் தி.மு.க. கவுன்சிலர்கள் இடையே மோதல், அடிதடி
x

கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகத்தில் தி.மு.க. கவுன்சிலர்கள் இடையே நடந்த மோதல், அடிதடியால் பரபரப்பு ஏற்பட்டது.



கள்ளக்குறிச்சி,


கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலக கூட்டரங்கில் நகராட்சி கூட்டம் நேற்று மாலை நகராட்சி தலைவர் சுப்ராயலு தலைமையில், ஆணையர் குமரன் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நகராட்சி கூட்டம் முடிந்த பிறகு, 5-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் யுவராணி ராஜாவும், 17-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் ஞானவேலுவும் உட்கட்சி பிரச்சனை தொடர்பாக வாக்குவாத‌த்தில் ஈடுபட்டனர். அப்போது, யுவராணி ராஜாவின் ஆதரவாளர்கள் ஞானவேலுவை தாக்கினர்.

அதே நேரத்தில், யுவராணி ராஜாவின் உறவினரும் 15-வது வார்டு கவுன்சிலருமான பாபுவும் சேர்ந்து தாக்குதல் நடத்தினார். நகராட்சி அலுவலகத்தில் ஏற்பட்ட இந்த தாக்குதலால் பரபரப்பு ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சி தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்த விவகாரத்தில், முன்னாள் எம்.எல்.ஏ. மூக்கப்பன் என்பவருக்கு ஆதரவாக, முன்னாள் நகர செயலாளர் மற்றும் முன்னாள் மாவட்ட பொருளாளரான கென்னடி செயல்பட்டு உள்ளார்.

இதனால் கென்னடி மற்றும் அவரது குடும்பத்தினரை, 17-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் ஞானவேல் ஆபாசமாக பேசி ஆடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த மோதல் நடந்துள்ளது என போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதனால், நகராட்சி அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.




Next Story