செஞ்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.42½ லட்சத்தில் வகுப்பறைகள் கட்டும் பணி தொடக்கம்


செஞ்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.42½ லட்சத்தில் வகுப்பறைகள் கட்டும் பணி தொடக்கம்
x
தினத்தந்தி 1 Feb 2023 6:58 PM GMT (Updated: 2 Feb 2023 11:26 AM GMT)

செஞ்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.42½ லட்சத்தில் வகுப்பறைகள் கட்டும் பணி தொடங்கியது.

பெரம்பலூர்

பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மூலம் தமிழ்நாடு முழுவதும் ரூ.784 கோடி மதிப்பீட்டில் 5 ஆயிரத்து 351 புதிய பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணிக்கான குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தை காட்பாடியில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் ஒன்றியம், ஆலம்பாடி ஊராட்சிக்குட்பட்ட செஞ்சேரி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கும், வேப்பூர் ஒன்றியம், பெரிய வெண்மணி ஊராட்சிக்குட்பட்ட கொத்தவாசல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கும் தலா ரூ.42½ லட்சம் மதிப்பீட்டில் ஒவ்வொரு பள்ளிக்கும் 3 புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியை செஞ்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுடன் அமர்ந்து கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா, பிரபாகரன் எம்.எல்.ஏ. காணொளி காட்சி மூலம் பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் அந்த பள்ளி வளாகத்தில் ரூ.42½ லட்சம் மதிப்பில் 3 புதிய வகுப்பறைகளுக்கு கட்டிடம் கட்டுவதற்கான பணியை பூமி பூஜையுடன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர். இதில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லலிதா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன், ஆலம்பாடி ஊராட்சி மன்ற தலைவர் கல்பனா சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story