ரூ.508 கோடி மதிப்பில் 688 சாலைகளில் மழைநீர் வடிகால்வாய் கட்டும் பணி - அமைச்சர் கே.என்.நேரு தகவல்


ரூ.508 கோடி மதிப்பில் 688 சாலைகளில் மழைநீர் வடிகால்வாய் கட்டும் பணி - அமைச்சர் கே.என்.நேரு தகவல்
x

ரூ.508.33 கோடி மதிப்பில் 688 சாலைகளில் மழைநீர் வடிகால்வாய் கட்டும் பணிகள் தொடங்கப்பட இருப்பதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

சென்னை

சென்னை மாநகராட்சி பெருங்குடி மண்டலம் மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.406.97 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகள் மற்றும் ரூ.24.66 கோடி மதிப்பீட்டில் சாலைகள் அமைக்கும் பணிகளுக்கு அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.

ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகள் ஜெர்மன் வங்கி நிதிஉதவி திட்டத்தின்படியும், சிங்காரச் சென்னை 2.0 திட்டம் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற சாலை உட்கட்டமைப்பு நிதி திட்டம் ஆகியவற்றின் கீழ் சாலை பணிகளும் நடக்கிறது.

பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது:-

பெருநகர சென்னை மாநகராட்சியில் 387 கிலோ மீட்டர் நீளம் பஸ் செல்லும் சாலைகளும், 5200 கிலோ மீட்டர் நீளம் கொண்ட உட்புறச் சாலைகளும் உள்ளன. தற்போது சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 405 சாலைகள் 101 கிலோ மீட்டர் நீளத்தில் ரூ.104 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது.

நகர்ப்புற சாலை உட்கட்டமைப்பு மற்றும் சேமிப்பு நிதியின் கீழ் 705 சாலைகள் 125 கிலோ மீட்டர் நீளத்தில் ரூ.68.70 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும் 630 சாலைகள் நகர்ப்புற உட்கட்டமைப்பு நிதி திட்டத்தில் ரூ.80 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தில் 1336 சாலைகள் 219 கிலோ மீட்டர் நீளத்தில் ரூ.151 கோடி மதிப்பீட்டில் பணிகள் துவங்கப்பட உள்ளன.

மண்டலம்-14-ல் 387 கால்வாய் பணிகள் ரூ280.58 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டுள்ளது. மண்டலம் 14-ல் சிங்காரச் சென்னை 2.0 திட்டம் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற சாலை உட்கட்டமைப்பு நிதி திட்டம் ஆகியவற்றின் கீழ் 243 சாலை பணிகள் 21.57 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டுள்ளது. மண்டலம்-15-ல் ஒருங்கினைந்த மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் திட்டத்தின் கீழ் 205 பணிகள் ரூ.126.39 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டுள்ளது.

மண்டலம்-15-ல் தமிழ்நாடு நகர்ப்புற சாலை உள்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ் 28 பணிகள் ரூ.3.09 கோடி மதிப்பீட்டில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியில் ரூ.1,897 கோடி மதிப்பில் 588 கிலோ மீட்டர் நீளத்தில் மழைநீர் வடிகால்வாய் கட்டும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

மேலும், ரூ.2,389 கோடி மதிப்பில் 441 கிலோ மீட்டர் நீளத்தில் மழைநீர் வடிகால்வாய் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றது. தற்போது ரூ.508.33 கோடி மதிப்பில் 120.55 கிலோ மீட்டர் நீளத்தில் 688 சாலைகளில் மழைநீர் வடிகால்வாய் கட்டும் பணிகள் தொடங்கப்பட உள்ளது.

இந்த நிகழ்ச்சியில், மேயர் பிரியா, அரவிந்த் ரமேஷ் எம்.எல்.ஏ., துணை மேயர் மு.மகேஷ்குமார், முதன்மைச் செயலாளர், மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, இணை ஆணையாளர் (பணிகள்) ஜி.எஸ். சமீரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story