சிறுமியை 2-வது திருமணம் செய்த கட்டிட தொழிலாளி போக்சோவில் கைது


சிறுமியை 2-வது திருமணம் செய்த கட்டிட தொழிலாளி போக்சோவில் கைது
x
தினத்தந்தி 5 Oct 2023 9:00 PM GMT (Updated: 5 Oct 2023 9:00 PM GMT)

முதல் மனைவி பிரசவத்திற்கு சென்ற நிலையில் 2-வதாக சிறுமியை திருமணம் செய்த கட்டிட தொழிலாளியை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

கோயம்புத்தூர்

முதல் மனைவி பிரசவத்திற்கு சென்ற நிலையில் 2-வதாக சிறுமியை திருமணம் செய்த கட்டிட தொழிலாளியை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

சிறுமியுடன் பழக்கம்

தர்மபுரி மாவட்டம் கொல்ல கொட்டகை பகுதியை சேர்ந்தவர் பொன்னுச்சாமி (வயது 28). கட்டிடத்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளார். இவர்கள் தற்போது கவுண்டம்பாளையம் அருகே உள்ள தொப்பம்பட்டி பிரிவு பகுதியில் வசித்து வருகின்றனர்.

பொன்னுசாமியின் மனைவி கர்ப்பமாக இருப்பதால் பிரசவத்திற்காக தனது மகனுடன் ஊருக்கு சென்றுள்ளார். இதனால் தனியாக வசித்து வரும் பொன்னுசாமி கடந்த 2 மாதத்திற்கு முன்பு இடிகரை பகுதியில் கட்டிட வேலைக்கு சென்றார். அங்கு வேலை செய்யும் போது அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.

போக்சோவில் கைது

தனக்கு திருமணம் ஆனதை மறைத்து பொன்னுச்சாமி அந்த சிறுமியுடன் நெருங்கி பழகினார். திடீரென அந்த சிறுமியுடன் அவர் மாயமானார்.

இதுபற்றி அந்த சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். இதன்பேரில், தங்கள் மகளை காணவில்லை எனவும், பக்கத்து வீட்டில் கட்டிட வேலைக்கு வந்து சென்ற வாலிபர் தனது மகளை கடத்திச் சென்று இருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் தெரிவித்து இருந்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் மாயமான சிறுமியை பொன்னுசாமி ஆசைவார்த்தை கூறி அழைத்து சென்று கட்டாய திருமணம் செய்து கொண்டு பதுங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து சிறுமியை போலீசார் மீட்டனர். மேலும் சிறுமியை ஆசை காட்டி ஏமாற்றி திருமணம் செய்து குடும்பம் நடத்திய பொன்னுசாமி மீது போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். சிறுமியை காப்பகத்தில் ஒப்படைத்தனர்.


Related Tags :
Next Story