மேல்மலையனூர், திருவக்கரை கோவில்களில் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம்


மேல்மலையனூர், திருவக்கரை கோவில்களில் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம்
x
தினத்தந்தி 8 Sep 2023 6:45 PM GMT (Updated: 8 Sep 2023 6:45 PM GMT)

அமாவாசை, பவுர்ணமி ஜோதி விழாவை முன்னிட்டு மேல்மலையனூர், திருவக்கரை கோவில்களில் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.

விழுப்புரம்

ஆலோசனைக்கூட்டம்

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் வருகிற 14-ந் தேதி (வியாழக்கிழமை) அமாவாசை விழாவும், திருவக்கரை சந்திர மவுலீஸ்வரர் கோவிலில் 29-ந் தேதி பவுர்ணமி ஜோதி திருவிழாவும் நடைபெற உள்ளது.

இவ்விழாவை முன்னிட்டு கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தருவது குறித்த முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

அடிப்படை வசதிகள்

மேல்மலையனூர் அங்காளம்மன், திருவக்கரை சந்திர மவுலீஸ்வரர் கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஏதுவாக ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில் அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, தற்காலிக கழிவறைகள், தற்காலிக பஸ் நிலையங்களை ஏற்படுத்த வேண்டும். கோவிலுக்கு வரும் வழிகளில் அதிகளவில் குப்பை தொட்டிகளை அமைக்கவும், சேரும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற துப்புரவு பணியாளர்களை பணியமர்த்த வேண்டும். மின்சார வாரியத்தின் சார்பில், கோவில்களில் உள்ள மின் வழித்தடங்களை பார்வையிட்டு சரிசெய்திட வேண்டும். திருவிழா நாட்களில் மின் பணியாளர்கள் 24 மணி நேரமும் பணியில் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். மேலும் கோவில் நிர்வாகம் சார்பில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமரா அமைத்து கண்காணிக்கும் பணிகளில் ஈடுபட வேண்டும். காவல்துறை சார்பில் பாதுகாப்பு நடவடிக்கையாக பாதுகாப்பு ஒத்திகை நடத்துவதுடன் திருட்டு, வழிப்பறி போன்ற அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாத வண்ணம் போதிய அளவில் போலீசாரை நியமித்து பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஊஞ்சல் உற்சவம் நடைபெறும் நேரத்தில் கோவிலின் ஊஞ்சல் மண்டபம் மற்றும் கிழக்கு மண்டபத்தின் மேற்பகுதியில் எவரும் ஏறாத வகையில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். கனரக வாகனங்கள் திருவிழா நாட்களில் செல்லாதவாறு கண்காணிக்க வேண்டும்.

சிறப்பு பஸ்கள்

தீயணைப்புத்துறை சார்பில் கோவில் வளாகத்தில் தீயணைப்பு வாகனம் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தொடர் பணியில் ஈடுபட வேண்டும். போக்குவரத்துத்துறை சார்பில் சிறப்பு பஸ் வசதி ஏற்படுத்துவதோடு சாலையோரங்களில் நிறுத்தாமல் பஸ் நிலையங்களில் மட்டுமே பஸ்கள் நின்றுசெல்வதை உறுதி செய்துகொள்ள வேண்டும். நெடுஞ்சாலைத்துறை சார்பில் அனைத்து இணைப்பு சாலைகளையும் இருவழி சாலையாக மாற்ற வேண்டும். சுகாதாரத்துறை சார்பில் சுகாதார மருத்துவக்குழுவுடன் அவசர ஊர்தியுடன் கோவில் வளாகத்திற்குட்பட்ட 2 இடங்களில் மருத்துவ முகாம் அமைக்க வேண்டும். உணவுத்துறை சார்பில் திருவிழா நடைபெறும் காலங்களில் கோவிலுக்கு வெளியே உள்ள உணவகங்களில் விற்கப்படும் உணவு பொருட்களை ஆய்வு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய், மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, திண்டிவனம் சப்-கலெக்டர் கட்டா ரவிதேஜா, விழுப்புரம் கோட்டாட்சியர் பிரவீனாகுமாரி உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story