ஒருங்கிணைப்பாளர்கள் பதவி காலியாகிவிட்டது எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிரடி அறிவிப்பு


ஒருங்கிணைப்பாளர்கள் பதவி காலியாகிவிட்டது எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிரடி அறிவிப்பு
x

அ.தி.மு.க.வில் எப்போதும் இல்லாத அளவுக்கு உட்கட்சி பூசல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.

சென்னை,

ஒற்றை தலைமை என்ற கோஷத்துடன் எடப்பாடி பழனிசாமி அணியினரும், இரட்டை தலைமையே நீடிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் பகீரத முயற்சி மேற்கொண்டு வருவதால், அ.தி. மு.க.வில் நொடிக்கு நொடி பரபரப்பு நிலவி வருகிறது. அந்த வகையில் பொதுக்குழு கூட்டமும் களேபரமாக நடந்து முடிந்தது.

இதைத்தொடர்ந்து மீண்டும் ஜூலை 11-ந் தேதி பொதுக்குழுவை கூட்டுவதற்கான முயற்சியில் எடப்பாடி பழனிசாமி அணியினர் முயற்சி மேற்கொண்டு உள்ளனர். இதை தடுக்கும் வகையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ஓ.பன்னீர்செல்வத்தின் டெல்லி பயணமும் பல்வேறு யூகங்களுக்கு வழி வகுத்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

இதற்கிடையே, திட்டமிட்டபடி 11-ந் தேதி பொதுக்குழுவை எந்தவொரு இடையூறும் இல்லாமல் வெற்றிகரமாக நடத்துவது குறித்தும், ஒற்றை தலைமை கொண்டு வருவது குறித்தும் பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டில் அவரது ஆதரவாளர்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், பொள்ளாச்சி ஜெயராமன், டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், கே.சி.அன்பழகன், டாக்டர் சி.விஜயபாஸ்கர், தளவாய் சுந்தரம், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஜூலை 11-ந் தேதி நடைபெறும் பொதுக்குழுவை எப்படி நடத்துவது? அதில் ஒற்றை தலைமை தீர்மானத்தை எவ்வாறு கொண்டு வந்து, எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்வது என்பது குறித்த பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது.

மேலும், பொதுக்குழு நடத்தப்படுவதை தடுப்பதற்காக ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை சட்டப்படி எதிர்கொண்டு அந்த தடைகளை எவ்வாறு உடைத்து எறிவது என்பது குறித்தெல்லாம் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சட்ட வல்லுனர்களுடனும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் நடைபெற்ற ஆலோசனைக்கு பிறகு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது:-

பதவிகள் செல்லாது

அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளரும், தஞ்சை மாவட்ட செயலாளருமான வைத்திலிங்கம் 23-ந் தேதி (நேற்று முன்தினம்) நடைபெற்ற பொதுக்குழு குறித்து சில கருத்துகளை கூறியிருக்கிறார். இந்த பொதுக்குழு கூட்டம் முறையாக கூட்டப்படவில்லை. இதற்கு சட்டபூர்வமான அங்கீகாரம் இல்லை. இந்த பொதுக்குழு கூட்டம் பொதுக்குழு உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படவில்லை. கூலியாட்களை வைத்தும், அடியாட்களைக் கொண்டும் நடத்தப்பட்டதாக கூறியிருக்கிறார்.

கட்சியின் அவைத்தலைவராக தமிழ்மகன் உசேனை முறைப்படி தேர்வு செய்யவில்லை என்று கூறியிருக்கிறார். இந்த பொதுக்குழுவில் நடந்து முடிந்த கட்சியின் அமைப்பு தேர்தலை அங்கீகரிக்காததால் தேர்வு செய்யப்பட்டவர்களின் பதவி செல்லாது. எனவே, இந்த பொதுக்குழு உறுப்பினர்களின் பதவியும் செல்லாது என்று கூறியிருக்கிறார். மீண்டும் பொதுக்குழுவைக் கூட்ட பொதுக்குழு வுக்கு அதிகாரம் இல்லை என்றும் கூறியிருக்கிறார். அவர் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு பதில் அளிக்க கடமைப்பட்டிருக்கிறோம்.

5-ல் ஒரு பங்கு ஆதரவு

கட்சியின் விதிப்படி பொதுக்குழுவை பொதுச் செயலாளர் அல்லது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கூட்டலாம். ஆண்டுக்கு ஒரு முறை கண்டிப்பாக கட்சியின் பொதுக்குழு கூட்டப்பட வேண்டும். மேலும், தேவைக்கேற்ப பொதுக்குழுவைக் கூட்டுகிற அதிகாரம் ஒருங்கிணைப்பாளருக்கும், இணை ஒருங்கிணைப்பாளருக்கும் உண்டு.

இல்லை என்றால், மொத்த பொதுக்குழு உறுப்பினர்களில் 5-ல் ஒரு பங்கு; அதாவது 2,665 பேரில் 5-ல் ஒரு பங்கு உறுப்பினர்கள் கையெழுத்திட்டு கொடுத்தால் பொதுக்குழுவைக் கூட்டலாம். பொதுக்குழு உறுப்பினர்களில் 5-ல் ஒரு பங்கு எண்ணிக்கையினர் கையெழுத்திட்டுக் கேட்டுக்கொண்டால், பொதுக்குழுவின் தனி கூட்டத்தை அறிவிப்பு கிடைத்த 30 நாட்களுக்குள் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கூட்ட வேண்டும். இதில் எங்கேயுமே இவர்களின் அனுமதியைப் பெற்று கூட்ட வேண்டும் என்று சொல்லப்படவில்லை. எனவே வைத்திலிங்கம் கூறியிருக்கிற இந்த கருத்து முழுக்க முழுக்க தவறு.

சட்ட விதிமீறல் இல்லை

கடந்த 23-ந் தேதிக்கு முன்பு வரை கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்த தற்போது இந்த கட்சியின் பொருளாளராக இருக்கின்ற ஓ.பன்னீர்செல்வமும், முன்னாள் இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த, தற்போது கட்சியின் தலைமை நிலையச் செயலாளர், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும் முறைப்படி கையொப்பமிட்டு அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் 2.6.2022 அன்று தேதியிட்ட கடிதத்தை அனைவருக்கும் முறையாக 15 நாட்கள் கால அவகாசம் வழங்கி 23.6.2022 அன்று பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அழைப்பு விடுத்துள்ளனர். எனவே கட்சி விதிகள், கோர்ட்டு உத்தரவுப்படி பொதுக்குழு முறையாக நடைபெற்றது. இதில் எந்தவிதமான சட்ட விதிமீறலும் இல்லை.

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவருக்கும்தான் அவைத்தலைவரை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் உள்ளது என்று கூறுகிறார். ஆனால், கட்சியின் விதிப்படி, தலைமை கழகத்தின் பொதுக்குழு உறுப்பினர்கள் கூடி, கட்சியின் அவைத்தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே இதுவும் தவறு. இருந்தபோதும், பொதுக்குழு கூட்டத்தில் தமிழ்மகன் உசேனை அவைத்தலைவராக நான் வழிமொழிகிறேன் என்று கூறினாரா? இல்லையா? என்பதை வைத்திலிங்கம் கூற வேண்டும். இதன் மூலம் தமிழ்மகன் உசேன் ஏகமனதாக அவைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

காலாவதியானஒருங்கிணைப்பாளர்கள் பதவி

23 தீர்மானங்களைத் தவிர வேறு எந்த தீர்மானங்களையும் நிறைவேற்றக்கூடாது என்றுதான் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. எனவே, தீர்மானங்களை ஏற்றுக்கொள்வதும், ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதும் பொதுக்குழுவின் உரிமை. தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டதால், பொதுக்குழு உறுப்பினர்களை தேர்ந்து எடுத்ததும் ரத்தாகி விட்டது என்று கூறுகிறார்கள். உட்கட்சி தேர்தலில் தேர்வு செய்யப்பட்டவர்களை அங்கீகரிக்க வேண்டும் என்று கட்சியின் விதிகளில் எங்கேயும் கூறப்படவில்லை. விதிமுறைகள்படி தேர்தல் நடத்தப்பட வேண்டும். இந்த தேர்தல் குறித்து முறையாக தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கப்பட்டுவிட்டது.

கட்சி விதி 43-ல் கட்சியின் சட்டதிட்ட விதிகளை இயற்றவும், மாற்றவும், நீக்கவும் பொதுக்குழு அங்கீகாரம் படைத்ததாகும். ஓ.பன்னீர்செல்வத்தின் சுயலாபத்திற்காக 1.12.2021 அன்று கட்சியின் சட்ட விதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. ஆனால் அது, நேற்றைய (நேற்று முன்தினம் நடைபெற்ற) பொதுக்குழுவுக்கு கொண்டு வராததால், தானாகவே காலாவதியாகிவிட்டது. எனவே, நேற்றுடன் (நேற்று முன்தினம்) ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டது. ஓ.பன்னீர்செல்வம் இந்த கட்சியினுடைய பொருளாளர், எடப்பாடி பழனிசாமி கட்சியின் தலைமை நிலையச் செயலாளர். இதுதான் இன்றைய நிலை.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இல்லாத நிலையில் கட்சி விதிப்படி அ.தி.மு.க. அவைத்தலைவர் பொதுக்குழுவை கூட்டுகிறார். 2,190 பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்து போட்டு கேட்டுக்கொண்டதால் புதிய பொதுக்குழு 11.7.2022 அன்று கூடுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story