செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு ஓட்டல் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்


செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு ஓட்டல் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்
x

செஸ் ஒலிம்பியாட் நடைபெறுவதை முன்னிட்டு வீரங்கள் தங்கும் ஓட்டல்களில் பணிபுரியும் ஓட்டல் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என சுகாதார குழுத்தலைவர் அறிவுறுத்தினார்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தை அடுத்த மாதம் 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ளது. இப்போட்டிகளில் உலகம் முழுவதிலும் இருந்து 186 நாடுகளை சேர்ந்த 2,500 வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்நிலையில் தமிழக அரசால் நியமனம் செய்யப்பட்ட செஸ் ஒலிம்பியாட் மருத்துவம் மற்றும் சுகாதார குழுத்தலைவரும், அரசு முதன்மைச் செயலாளருமான டாக்டர் செந்தில் குமார் தலைமையில் வீரர்கள் தங்கும் விடுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அப்போது, ஓட்டலில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும். தடுப்பூசியும் போட்டு கொண்டதற்கான சான்றுகளை ஒலிம்பியாட் போட்டி மருத்துவ குழுவிடம் ஒப்படைக்க வேண்டும். தொற்று நோய்கள் பரவாத வகையில் அனைத்து ஒட்டல்களிலும் சுற்றுப்புரத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குனர் டாக்டர் உமா, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத், உணவு பாதுகாப்பு துறை அலுவலர் அனுராதா, மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் வி.கணேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story